லண்டன்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் நடப்பு வெற்றியாளர் லெஸ்டர் சிட்டி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. டென்மார்க்கின் எஃப்.சி. கோப்பன்ஹேகன் குழுவை அது 1-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது. இந்த ஆட்டம் லெஸ்டர் சிட்டிக்குச் சொந்தமான கிங் பவர் விளையாட்டரங்கத்தில் நேற்று அதிகாலை நடைபெற்றது. இடைவேளைக்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது கோப்பன்ஹேகன் குழுவின் பெனால்டி எல்லைக்குள் லெஸ் டரின் ஜேமி வார்டி அனுப்பிய பந்தைத் தலையால் முட்டினார் இஸ்லாம் ஸ்லிமானி. ஸ்லிமானி அனுப்பிய பந்து ரியாட் மாரெஸிடம் செல்ல அதை அவர் வலைக்குள் சேர்த்தார். லெஸ்டர் சிட்டி இடம் பெற்றிருக்கும் பிரிவின் மற்றோர் ஆட்டத்தில் பெல்ஜியத்தின் கிளப் புரூஜ் குழுவை போர்ச்சுகலின் போர்ட்டோ 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. இது லெஸ்டருக்குச் சாதகமாக அமைந் துள்ளது.
அடுத்த மாதம் 2ஆம் தேதி டென்மார்க்கில் கோப்பன்ஹேகன் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் லெஸ்டர் சிட்டி சாம்பியன்ஸ் லீக் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். "நாங்கள் இப்பொழுது நல்ல நிலையில் இருக்கிறோம். இந்த ஆட்டம் சவால்மிக்கதாக இருக் கும் என்பது எங்களுக்குத் தெரியும். கோப்பன்ஹேகன் இறுதி வரை போராடியது," என்று லெஸ்டர் சிட்டியின் நிர்வாகி கிளோடியோ ரெனியேரி தெரி வித்தார். மற்றோர் ஆட்டத்தில் ஸ்பானிய லீக் ஜாம்பவான் ரியால் மட்ரிட் 5=1 எனும் கோல் கணக்கில் போலந்தின் லேகியா வார்சாவைப் பந்தாடியது.
சொந்த மண்ணில் விளையாடிய ரியால், லேகியா வார்சா குழுவை எளிதில் ஓரங்கட்டியது. இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு லேகியா வார்சாவின் ரசிகர்கள் ஸ்பானிய போலிசாருக்கு எதிராகக் கைகலப்பில் இறங்கினர். இந்த வன்முறையின் காரண மாக ஐந்து ரசிகர்களும் இரண்டு போலிஸ் அதிகாரிகளும் காயம் அடைந்தனர். ஸ்பர்ஸ் குழுவுக்கும் பயர் லெவகுசனுக்கும் இடையிலான ஆட்டம் கோல் ஏதுமின்றி சம நிலையில் முடிந்தது. இரு குழுக்களுமே வெற்றிக்குக் குறிவைத்து தாக்குதல்களில் ஈடுபட்டன.