டாக்கா: அண்மையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியைத் தமது சுழலால் திக்கு முக்காட வைத்தார் 19 வயதேயான பங்ளாதேஷ் பந்து வீச்சாளர் மெஹதி ஹசன் மிராஸ் (படம்). இரு போட்டிகள் கொண்ட அத்தொடரின் முதல் ஆட்டத்தில் ஏழு, இரண்டாம் ஆட்டத்தில் பன்னிரண்டு என ஒட்டுமொத்தமாக 19 விக்கெட்டுகளை அள்ளினார் மெஹதி. அதனால் இரண்டாவது போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் தொடர் நாயகன் விருதும் இவர் வசம் சேர்ந்தன. இப்படி அறிமுக தொடரிலேயே சாதித்தபோதும் இவரது வாழ்க்கை வளமாக இல்லை.
தகரக் கூரையைக் கொண்ட ஈரறை வீட்டில் தம் குடும்பத்தாருடன் இவர் வாழ்க்கையைக் கழித்து வருகிறார். குல்னா நகரில் உள்ள இவரது வீட்டிற்குச் செல்லும் சந்தில் ஒரு ரிக்ஷாகூட செல்ல முடியாதாம். இதை அறிந்ததும் மெஹதிக்கு உடனடியாக ஒரு வீட்டைக் கட்டித் தருமாறு பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டார். தேசிய அணியில் இடம்பெறுமுன் 15, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிகளின் தலைவராகவும் மெஹதி செயல்பட்டார்.