ஹைதராபாத்: பங்ளாதேஷ் கிரிக் கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா - பங்ளாதேஷ் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இன்று காலை 9.00 மணிக்குத் தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதேபோல பங்ளா தேஷுக்கு எதிரான டெஸ்டிலும் இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதையொட்டி இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் கும்பிளே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
"இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றோம். அதே உத்வேகத்தை இந்தப் போட்டியிலும் தொடர விரும்புகிறோம். உள்ளூர் சீசன் இதுவரை எங்களுக்கு நன்றாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று அதன் மூலம் நம்பிக் கையை அடுத்த போட்டிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் இந்தப் போட்டிக்குப் பிறகு மேலும் சில டெஸ்டுகளில் விளையாட உள்ளோம்," என்றார் கும்பிளே.
பங்ளாதேஷ் அணியை ஒரு மேம்பட்டு வரும் அணி என்று கூறிய அவர், "அண்மையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர்கள் உண்மையிலேயே சிறப்பாகச் செயல்பட்டு இருந்தனர். நிச்சயம் அவர்களை நாங்கள் மதித்தே ஆக வேண்டும். சில தரமான வீரர்கள், ஆல் - ரவுண்டர்கள் அந்த அணியில் அங்கம் வகிக்கிறார்கள். எனவே இது சுவாரஸ்யமான டெஸ்ட் போட்டியாக இருக்கப்போகிறது," என்றார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியது குறித்துப் பேசப் படுவதைச் சுட்டிக்காட்டி கும்பிளே, வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியமாக இருந்ததையும் மறக்கக் கூடாது என்றார்.