சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று நடந்த ஆடவருக்கான பேட்மிண்டன் பொதுவிருதுப் போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டத்தில் வெற்று பெற்று பட்டத்தை வென்றுள்ளார் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் (படம்). சீன வீரர் சென் லாங்குடன் நேற்று மோதினார் ஸ்ரீகாந்த். சென் லாங்கிடம் ஏற்கெனவே 5 முறை ஸ்ரீகாந்த் தோற்றுள்ளதால் ஸ்ரீகாந்த் மீண்டும் தோல்வி அடைவாரா அல்லது பதிலடி கொடுப்பாரா என ரசிகர்களிடையே இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியது. இருவருக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் 22-20 என்ற கணக்கில் ஸ்ரீகாந்த் முதல் செட்டை கைப்பற்றினார்.
இரண்டாவது செட் ஆட்டத்தில் சென் லாங் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த் 21-16 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றியாளர் பட்டத்தைத் தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் 5 முறை தோல்விக்குத் தகுந்த பதிலடியை கொடுத்துள்ளார் ஸ்ரீகாந்த். அண்மையில் நடைபெற்ற இந்தோனீசியா பேட்மிண்டன் தொடரிலும் ஸ்ரீகாந்த் வெற்றி யாளர் பட்டம் வென்றிருந்தார். வெற்றியாளர் பட்டம் வென்றுள்ள ஸ்ரீகாந்த்க்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது. படம்: ஏஎஃப்பி