லண்டன்: இங்கிலாந்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற பெண்களுக்கான உலகக் கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. பூவா தலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் களக்காப்பைத் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளாகக் களம் இறங்கிய இந்தியாவின் பூனம் ரவுத், மந்தனா ஆகிய இருவரும் தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத் தினார்கள். மந்தனா 72 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 90 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதுதான் இந்தியா இழந்த முதல் விக்கெட். அப்போது இந்திய அணி 26.5 ஓவரில் 144 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அடுத்து இந்திய அணித் தலைவர் மித்தாலி ராஜ் களம் இறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பூனம் ரவுத் 134 பந்தில் 86 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மித்தாலி ராஜ் 73 பந்தில் 71 ஓட்டங்கள் எடுத்து 50வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டம் இழக்க இந்தியா 50 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 281 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
பின்னர் இங்கிலாந்து அணிக்குத் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய பியோமாண்ட், எஸ்.ஜே. டெய்லர் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பின் களமிறங்கிய எச்.சி. நைட் 85 பந்துகளில் 46 ஓட்டங்களும், ஸ்கிவர் 18 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பின் எஃப்.சி. வில்சன் 81 ஓட்டங்களை எடுத்தார். ஒருபக்கம் இங்கிலாந்து அணியின் எண்ணிக்கை அதிகரித்த போதும் இந்திய பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இந்தியாவின் டி.பி. ஷர்மா மூன்று விக்கெட்டுகளையும், எஸ் பாண்டே இரண்டு விக்கெட்டுகளையும், பூனம் யாதவ் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி 47.3 ஓவர்களில் 246 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. 100 பந்துகளில் 90 ஓட்டங்கள் எடுத்த இந்தியாவின் எஸ்.மந்தனா ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.