பர்லின்: ஜெர்மனியில் நடைபெற்ற ஜூனியர் உலகத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக் கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை யஷ்வினி சிங் தேஷ்வால் தங்கம் வென்றுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் யஷ்வினி 235.9 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். தென்கொரிய வீராங்கனை கிம்வூரி இரண்டாவது இடத்தை (231.8 புள்ளிகள்) பிடித்தார். கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை ஒன்பது முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள யஷ்வினி, தற்போதுதான் முதல் முறையாகத் தங்கம் வென்றுள்ளார்.
இதன் மூலம் இந்திய அணி பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவதற்கு அவர் உதவியுள்ளார். சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்திய வீரர்கள் இதுவரை இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் பதக்கம் வென்றுள்ளனர். போட்டியின் முதல் நாளில் ஆண்களுக்கான 25 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் அனிஷ் பன்வாலா இரண்டு தங்கங்களை வென்று அசத்தினார். பலமுறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று தோல்வியைத் தழுவியபோதிலும் துவண்டுவிடாமல் போராடிய இந்தியாவின் யஷ்வினி சிங் தேஷ்வால் இம்முறை தங்கம் வென்றார். வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்ற பிற நாட்டு வீராங்கனையுடன் யஷ்வினி (நடுவில்). படம்: இணையம்