சிங்கப்பூர் காற்பந்தாட்ட மேம்பாட்டை அனைத்து வகையிலும் நுணுக்கமாகக் கண்காணித்து மேம்படுத்த புதிய தொழில்நுட்ப இயக்குநரை நியமித்துள்ளதாக சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் நேற்று அறிவித்துள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் புதிய தொழில்நுட்ப இயக்குநராகப் பதவியேற்றுள்ள திரு ஜோசப் பாலட்சைட்ஸ், 53 வயது, தேசிய அளவிலான குழுக்கள், அடித்தள அமைப்புகளின் குழுக்கள், பெண்கள் காற்பந்து ஆகியவற்றில் கவனம் செலுத்துவார். சிங்கப்பூர் காற்பந்துக் குழுக்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி, இளையர் மேம்பாடு போன்ற துறைகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபடுவார்.
அத்துடன் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட மற்ற காற்பந்துக் குழுக்களுக்கான பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவறுக்கான தற்போதுள்ள விதிமுறைகள், மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றுக்கான அடிப்படைக் கோட்பாடுகளையும் நடைமுறைத் திட்டங்களையும் ஆய்வுசெய்து தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்யவும் அவர் உதவுவார் என்று சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் தெரிவித்தது.

