பெங்களூரு: முதல்தர ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆக இளம் வயதில் இரட்டைச் சதம் விளாசிய ஆட்டக்காரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் மும்பையைச் சேர்ந்த 17 வயதான யஷஷ்வி ஜெய்ஸ்வால்.
இந்தியாவில் பிரபல உள்ளூர் ஒருநாள் போட்டித் தொடரான விஜய் ஹசாரே கிண்ணப் போட்டிகள் நடந்து வருகின்றன. பெங்களூரில் நேற்று நடந்த போட்டியில் மும்பை-ஜார்க்கண்ட் அணிகள் மோதின.
முதலில் பந்தடித்த மும்பை அணிக்கு யஷஷ்வியும் ஆதித்ய தாரேவும் இணைந்து அபாரத் தொடக்கம் தந்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 200 ஓட்டங்களைச் சேர்த்தனர்.
தாரே 78 ஓட்டங்களில் ஆட்டமிழந்தபோதும் தொடர்ந்து அதிரடியாகப் பந்தடித்த யஷஷ்வி 154 பந்துகளில் 17 பவுண்டரி, 12 சிக்சருடன் 203 ஓட்டங்களை விளாசினார்.
இறுதியில், 50 ஓவர் முடிவில் மும்பை அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 358 ஓட்டங்களைக் குவித்தது.
இந்தத் தொடரில்தான் யஷஷ்வி அறிமுகமானார். இதுவரை ஐந்து போட்டிகளில் ஆடி உள்ள இவருக்கு இது மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.