உலகக் காற்பந்து அரங்கில் பரம வைரிகள் என்றாலே இங்கிலாந்தின் லிவர்பூல், மான்செஸ்டர் யுனைடெட் குழுக்கள்தான் நினைவுக்கு வரும்.
ஒவ்வொரு முறையும் இவ்விரு காற்பந்து ஜாம்பவான்கள் பொருதும் ஆட்டம் உலகக் காற்பந்து ரசிகர்களை ஈர்க்கும். மில்லியன் கணக்கில் ரசிகர்கள் தொலைக் காட்சியில் ஆட்டத்தைக் காண்பர். இந்த ஆட்டத்தைக் கண்குளிர நேரடியாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் பல மாதங்களாகத் திட்டமிட்டனர் மூன்று உள்ளூர் லிவர்பூல் ரசிகர்கள். அவர்
களின் ஆசைப்படி லிவர்பூல் அணியின் சொந்த அரங்கமான ஆன்ஃபீல்ட்டுக்கு நேற்று முன்தினம் சென்று, ஆட்டத்தைப் பார்த்து, தங்களது நீண்டநாள் கனவை நனவாக்கினர் இந்த தீவிர ரசிகர்கள். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தமது 51வது பிறந்தநாளை திரு எஸ்.கே.செல்வா கொண்டாடியபோது தமது நண்பர் த.சிவகுமாருடன் இணைந்து இவ்வாட்டத்தைப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தார். சிவகுமாரின் உறவினர் 36 வயது ப.புவேந்திரனும் இப்பயணத்தில் இணைந்தார்.
ஆட்டத்தைப் பார்ப்பது மட்டும்போதாது, ஒரு வித்தியாசமான அனுபவத்தையும் பெற வேண்டும் என்ற முனைப்புடன் மூவரும் இருந்தனர். லிவர்பூல் விளையாட்டாளர்கள் ஆட்டத்திற்கு முன் காலை நடைக்குப் போவார்கள் என்று தெரிந்து, அதிகாலையில் எழுந்து கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் விளையாட்டாளர்கள் இருந்த ஹோட்டலுக்கு வெளியே இம்மூவரும் காத்திருந்தனர். காலை நடையிலிருந்து திரும்பிய லிவர்பூல் குழுவினர் சிறிது நேரம் காற்பந்து ரசிகர்களைச் சந்தித்து காற்பந்துச் சீருடைகளில் கையெழுத்திட்டனர்.
‘‘லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப், நட்சத்திர ஆட்டக்காரர்கள் சாடியோ மானே, வென் டாயிக் ஆகியோரை நேரில் சந்தித்தோம். அவர்கள் எங்களின் காற்பந்துச் சீருடைகளில் கையெழுத்திட்டது மறக்க முடியாத அனுபவம்,’’ என்று தெரிவித்தார் சுற்றுலாத் தளத்தில் இயக்குநராகப் பணியாற்றும் திரு செல்வா, 51.
லிவர்பூல் குழுவை ஆட்டத்திற்கு வரவேற்பதற்காக ஆன்ஃபீல்ட் அரங்கின் தெருவில் ரசிகர்கள் கூடி, பாடல்கள் பாடி, ஊர்வலமாகப் போன அனுபவம் புவேந்திரனுக்கு மறக்க முடியாத ஒன்றாக விளங்கியது. இவ்விரு குழுக்களுக்கிடையே நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் லிவர்பூல் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
‘‘முகம்மது சாலா ஆட்டம் முடியும் கட்டத்தில் போட்ட கோல் எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கவைத்தது. இன்னும் ஒன்பது ஆட்டங்களில் பிரிமியர் லீக் விருதை லிவர்பூல் கைப்பற்றி விடும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது,’’ என்று சொன்னார் 47 வயது கொள்முதல் நிர்வாகி சிவகுமார்.
இவர்களின் கனவுப் பயணம் இன்னும் முடியவில்லை. வரும் வெள்ளிக்கிழமை ஊல்வர்ஹேம்டன் குழுவும் லிவர்பூல் குழுவும் ஆடும் ஆட்டத்தைப் பார்த்துவிட்டுத்தான் இவர்கள் சிங்கப்பூர் திரும்புகின்றனர்.