லண்டன்: ஐரோப்பியக் காற்பந்து உலகில் பிரசித்திபெற்ற சாம்பியன்ஸ் லீக், யூரோப்பா லீக் போட்டிகளில் விளையாட மான்செஸ்டர் சிட்டி குழுவிற்கு ஈராண்டுகால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை அதிகாலை நடைபெறவுள்ள முக்கிய ஆட்டத்தை நோக்கி தனது கவனத்தை அக்குழு ஒருமுகப்படுத்தியுள்ளது.
சாம்பியன்ஸ் லீக் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் ஆட்டத்தில், ஸ்பானிய ஜாம்பவான் குழுவான ரியால் மட்ரிட்டுடன் மேன்சிட்டி மோதுகிறது.
பதின்மூன்று முறை சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளரான ரியால் மட்ரிட் குழுவை இச்சுற்றின் இரு ஆட்டங்களிலும் தோற்கடிக்கத் தவறினால், ஈராண்டுகளுக்கு ஐரோப்பிய போட்டிகளைவிட்டு விலகியிருக்க வேண்டிய நிலையை ஜீரணிக்க வேண்டும் என்பதை மேன்சிட்டி வீரர்கள் நன்கு உணர்ந்திருப்பர்.
ஐக்கிய அரபு சிற்றரசை சேர்ந்த ஷேக் மன்சூர், 2008ஆம் ஆண்டில் மேன்சிட்டியை வாங்கியதைத் தொடர்ந்து, அக்குழுவின் செல்வாக்கு மளமளவென உயர்ந்தது. எனினும், இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் சக்கைபோடு போட்டுவரும் மேன்சிட்டியால் இந்நாள் வரை சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வெல்ல முடியவில்லை.
கடைசியாக 2015/16 லீக் பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் அரையிறுதிச் சுற்று வரை சென்றதே மேன்சிட்டியின் ஆகச் சிறந்த செயல்பாடாக இருந்தது. அப்போது அரையிறுதிச் சுற்றில் அக்குழு தோல்வியுற்றது ரியால் மட்ரிட்டிடம்தான்.
கடைசியாக நடந்து முடிந்த இரு பருவங்களில் காலிறுதிச் சுற்று வரை சென்ற மேன்சிட்டி, இங்கிலிஷ் குழுக்களிடம் சரணடைந்தது.
மாறாக, ரியால் மட்ரிட் குழுவோ, ஒவ்வொரு முறையும் சாம்பியன்ஸ் லீக்கில் சிறப்பாக விளையாடியுள்ளது. மேன்சிட்டியின் தற்போதைய நிர்வாகியும் பார்சிலோனாவின் முன்னாள் நிர்வாகியுமான பெப் கார்டியோலா (படம்), பழைய பரம எதிரியான ரியால் மட்ரிட்டை “ஐரோப்பாவின் அரசன்” என்று வர்ணித்துள்ளார்.
கடந்த வாரம் ஸ்பானிய நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த மேன்சிட்டி வீரர் ரஹீம் ஸ்டெர்லிங், “ரியால் மட்ரிட் குழுவைவிட வேறு எந்தக் குழுவாலும் அதிக சவால் தர முடியாது,” என்று குறிப்பிட்டார்.
விதியை மதியால் வெல்ல முடியும் என்ற கூற்றுக்கு ஏற்றாற்போல காற்பந்து விமர்சகர்களின் எண்ணங்களை மாற்ற ரியால் மட்ரிட் உடனான ஆட்டம் மேன்சிட்டிக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.