லண்டன்: உலக நாடுகளை கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்று புரட்டி எடுத்து வருகிறது.
இதன் காரணமாக காற்பந்துப் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல காற்பந்துக் குழுக்களின் வருமானம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் கெடுதலிலும் நன்மை ஏற்படும் சாத்தியம் இருப்பதாக நம்பப்படுகிறது.
“இதற்கு முன் இத்தகைய சூழலை நம்மில் யாரும் சந்தித்ததில்லை. கொரோனா கிருமித்தொற்று அனைவரின் வாழ்க்கையையும் பெருமளவில் மாற்றிவிடும்,” என்று எவர்ட்டன் குழுவின் நிர்வாகி கார்லோ அன்சலோட்டி தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு தற்போதுதான் ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் காற்பந்து ஆட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் பணம் பார்த்து வரும் காற்பந்து உலகம் தற்போது வருமானம் பாதிக்கப்பட்ட நிலையில் செய்வதறியாது தவித்து வருகிறது.
ஆட்டக்காரர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள் ஆகியோரின் சம்பளம் குறைக்கப்படுவது உறுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நேரடி ஒளிபரப்பு மூலம் கிடைக்கும் பணம் தற்போது கிடையாது. இதனால் ஆட்டக்காரர்கள், நிர்வாகிகள் ஆகியோரின் சம்பளம் குறையும்.
“மக்களின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளதால் காற்பந்து ஆட்டங்களை விளையாட்டரங்கத்தில் காண தேவைப்படும் நுழைவுச்
சீட்டுகளுக்கான விலையும் குறையும். பொருளியலில் மாற்றம் ஏற்படும். அதன் எதிரொலியாக காற்பந்தும் மாறக்கூடும். இதனால் காற்பந்து உலகம் மேம்பட்டு நன்மை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது,” என்றார் அன்சலோட்டி.
“நெருக்கடிநிலைக்குப் பிறகு நல்ல காலம் பிறந்து வாய்ப்புகள் குவிவது வழக்கம். ஆனால் நிலைமை மோசமடையும் அபாயமும் உள்ளது. நிலைமை மேம்பட காற்பந்து உலகில் அதிகாரம் சமமாகப் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும்,” என்றார் காற்பந்து வரலாற்று நிபுணர் டேவிட் கோல்பிளேட்.
“அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் தற்போது செலவிடுவது போல குழுக்களால் செலவிட முடியாது. இதனால் புதிய காற்பந்து உலகம் பிறக்கும்,” என்றார் பயர்ன் மியூனிக் தலைவர் உலி ஹோனஸ்.