விஜய் தொலைக்காட்சியில் வெளியான 'குக் வித் கோமாளி 2' நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களை கிட்டத்தட்ட 5 மாதங்களாக சிரிக்க வைத்தது. இந்நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து பலரின் மனதைக் கவர்ந்த பாடகி ஷிவாங்கி தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தில் நடித்து வருகிறார்.
முதல் சீசனைவிட இரண்டாவது சீசனுக்கு மிகப்பெரிய வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்தது. இந்நிகழ்ச்சி குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசினார் ஷிவாங்கி.
"சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் பாடகியாக கலந்துகொண்டேன். அதனைத் தொடர்ந்து 'குக் வித் கோமாளி 2' நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் பல குடும்பங்களில் அவர்கள் வீட்டுப் பெண்ணாகவே மாறிவிட்டேன்.
"பாடகியாக இருந்த எனக்குள் இருந்த நகைச்சுவைத் திறனை இந்நிகழ்ச்சி ஒட்டுமொத்தமாக வெளிக்கொண்டு வந்தது. இது என்னுடைய வளர்ச்சிக்கு மிகப்
பெரிய காரணமாக மாறியுள்ளது.
"இந்நிகழ்ச்சிக்கு முன் சமையல் பற்றி எதுவுமே தெரியாது. தற்பொழுது சமையல் செய்யக் கற்று வருகிறேன்.
"இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் அஸ்வின். அவர் நிகழ்ச்சியின்போது சமையலைப் பற்றி மட்டுமே நினைவில் வைத்து இருப்பார். அவரை முதன்முதலாக பார்த்தபோது, 'இப்படி ஓர் அழகான பையன் சமைக்க வந்திருக்கிறாரே,' என்றுதான் நினைத்தேன். அதன் பின்னர் நான் அவருடன் இணைந்து சமையல் செய்ய விருப்பம் தெரிவித்து அந்த வாய்ப்பு மற்ற கோமாளிகளுக்குப் போகும்போது எனக்கு கோபமாக வரும்.
"வாய்ப்புக் கிடைக்காதபோது என் சக போட்டியாளருக்கு உதவாமல் அஸ்வினுடன் கடலை போடப் போய்விடுவேன். எங்களுடைய கூட்டணி இந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எனது வளர்ச்சியைப் பார்த்து அஸ்வினும் அவரது வளர்ச்சியைப் பார்த்து நானும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
"டான்' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ஒரு கனவாகவே இருக்கிறது.
"சின்னத்திரை படப்பிடிப்பிற்கும் பெரிய திரை படப்பிடிப்பிற்கும் அதிகமான வித்தியாசங்கள் இருப்பதை முதல் நாளே புரிந்துகொண்டேன். ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன்.
"எங்கள் கூட்டணியைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் மக்களின் மனங்களைக் கவர்ந்த மற்றொரு
கோமாளி என்றால் அது புகழ்தான். தொலைக்காட்சியிலும் வீட்டிலும் என்னைத் தனது சொந்த தங்கையாகவே புகழ் அண்ணன் பார்த்துக் கொள்கிறார்," என்றார்.
'குக் வித் கோமாளி' அரங்கைப் பிரிய முடியாமல் தவிப்பதாகவும் மீண்டும் அடுத்த சீசன் வந்தால் தானாகவே அந்த அரங்கிற்குள் நுழைந்துவிடப் போவதாகவும் கூறினார் ஷிவாங்கி.