மான்செஸ்டர்: புதிய நிர்வாகிக்குக் கீழ் படிப்படியாக முன்னேற்றம் காட்டிவரும் மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்து அணி, அதிரடியாகக் களமிறங்க ஆவலாகக் காத்திருக்கின்றனர் அதன் ரசிகர்கள். பழைய நிர்வாகி ஒலே குனா சோல்ஷியாவின் தலைமையில் சரிவை எதிர்கொண்ட யுனைடெட் பெரிதும் மேம்பட்டுள்ளது, இப்போது கோல்களை அதிகம் விடுவதில்லை. ஆனால், ரசிகர்களை உற்சாகப்படுத்துவது என்பது அடுத்த கட்டம். அதை வூல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்ஸுக்கு எதிராக செய்வது பெரும் சவாலாக அமையலாம்.
இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் இவ்விரு அணிகளும் இன்று பின்னிரவு மோதவிருக்கின்றன. லீக் பட்டியலில் யுனைடெட் ஆறாவது இடத்திலும் வூல்வ்ஸ் ஏழாவது இடத்திலும் இருக்கின்றன.
முதலிடத்தை வகிக்கும் நடப்பு வெற்றியாளர் அணியான மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் தப்பாட்டம் காரணமாக தனது முக்கியமான விளையாட்டாளர் ரவுல் ஹிமெனெஸ் நீக்கப்பட்டபோதும். 1-0 எனும் கோல் கணக்கில் மட்டுமே தோல்வியடைந்தது வூல்வ்ஸ். இப்படிப்பட்ட அணிகளை வென்று தனது ஆற்றலை வெளிப்படுத்தவேண்டிய நிலையில் யுனைடெட் உள்ளது.
கிரிஸ்டியானோ ரொனால்டோ, புரூனோ ஃபெர்னாண்டெஸ் ஆகியோரை மட்டும் சார்ந்திராமல் தனது அணியை சிறப்பாக ஆடவைக்க முயல்கிறார் யுனைடெட்டின் புதிய நிர்வாகி ரால்ஃப் ரானிக்.
"ரொனால்டோ, புரூனோ ஆகிய இருவருக்கும் இடையிலான புரிந்துணர்வில் மட்டும் கவனம் செலுத்தக்ககூடாது. இதர விளையாட்டாளர்களிடமும் நல்ல புரிந்துணர்வு இருக்கவேண்டும்," என்று பர்ன்லீக்கு எதிரான யுனைடெட்டின் சென்ற லீக் ஆட்டத்திற்குப் பிறகு சொன்னார் ரானிக். "ஒவ்வோர் ஆட்டத்திலும் வெவ்வேறு விளையாட்டாளர்கள் களமிறக்கப்படுவர், அதனால் இதர விளையாட்டாளர்களிடையே நல்ல புரிந்துணர்வை வளர்ப்பதிலும் குழுவாக மேம்படுவதிலும் கவனம் செலுத்தவேண்டும்," என்றும் ரானிக் குறிப்பிட்டிருந்தார்.