லண்டன்: மான்செஸ்டர் சிட்டியுடன் தான் மோதிய இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் நடுவர்கள் பாரபட்சம் காண்பித்ததாக ஆர்சனல் காற்பந்து அணி குமுறுகிறது. முற்பாதியாட்டத்தில் 'பெனாட்டி பாக்ஸ்' எனச் சொல்லப்படும் வலைக்கு அருகே உள்ள பகுதியில் ஆர்சனலின் மார்ட்டின் ஓடகார்ட்டை சிட்டி கோல் காவலர் எடர்சன் தடுக்கிவிட்டார். அது தப்பாட்டம் என வகைப்படுத்தப்படவில்லை. சம்பவத்தை அரங்கில் உள்ள திரையில் பார்த்து முடிவை மறுவுறுதிப் படுத்திக்கொள்ளுமாறு காணொளி உதவியுடன் செயல்படும் 'விஏஆர்' நடுவர்கள் ஆட்ட நடுவரிடம் கூறவில்லை.
எனினும், அத்தகைய சம்பவம் சிட்டிக்கு நிகழ்ந்தபோது திரைக்குச் சென்று முடிவெடுக்குமாறு ஆட்ட நடுவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். அவர் முடிவை மாற்றிக்கொண்டதால் சிட்டிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்திக்கொண்டு கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியது சிட்டி.
"அந்தத் தப்பாட்டத்திற்கு பெனால்டி வழங்கப்படவேண்டியதுதான், ஆனால் பாரபட்சம் தெரிந்தது," என்றார் ஆர்சனலின் துணை நிர்வாகி ஆல்பர்ட் ஸ்டியூவென்பெர்க்.
"இரண்டு சம்பவங்களையும் தப்பாட்டம் இல்லை என்று ஆட்ட நடுவர் முதலில் வகைப்படுத்தினார். ஆனால் ஒரு சம்பவத்திற்கு மட்டும் திரையில் பார்த்து தனது முடிவை மாற்றிக்கொண்டார்," என்று ஆர்சனல் கோல் காவலர் ஏரன் ரேம்ஸ்டேல் வருத்தப்பட்டார்.
தப்பாட்டம் காரணமாக பிற்பாதியில் ஆர்சனலின் கேப்ரியல் ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டார். 10 விளையாட்டாளர்களுடன் இறுதிவரை மனந்தளராமல் ஆடியது ஆர்சனல். எனினும், கடைசி மூன்று நிமிடங்களில் வெற்றி கோலைப் போட்டு 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது சிட்டி.
ஆர்சனலின் இளம் வீரர்கள் ஏமாற்றமடைந்தனர்.