லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் புதிய பருவம் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஆர்சனலும் கிறிஸ்டல் பேலும் மோதின. இதில் ஆர்சனல் 2-0 எனும் கோல் கணக்கில் போராடி வென்றது.
மான்செஸ்டர் சிட்டியிலிருந்து விலகி ஆர்சனலில் இணைந்த கேப்ரியல் ஜேசுஸ், ஒலெக்சாண்டர் சின்செங்கோ ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
ஆர்சனல் தாக்குதலில் தீவிரம் காட்ட, பேலசின் பெனால்டி எல்லைக்குள் சின்செங்கோ அனுப்பிய பந்தை கேப்ரியன் மார்ட்டினேலி தலையால் முட்டி வலைக்குள் சேர்த்தார்.
இடைவேளைக்கு முன்பு
ஆட்டத்தைச் சமன் செய்ய பேலசுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஒட்சோன் எட்வார்ட் தலையால் முட்டிய பந்தைப் பாய்ந்து தடுத்தார் கோல்காப்பாளர் ஏரன் ரேம்ஸ்டேல்.
பிற்பாதி ஆட்டத்திலும் கோல் போட கிடைத்த வாய்ப்புகளை பேலஸ் நழுவவிட்டது. இதற்கு ஆர்சனல் கோல்காப்பாளரின் சாகசங்களும் விழிப்பும் முக்கிய காரணங்களாக அமைந்தன.
எப்படியாவது கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்ய வேண்டும் என முனைப்புடன் பேலஸ் ஆட்டக்காரர்கள் விளையாடினர். கடைசி 15 நிமிடங்களில் தாக்குதலில் ஈடுபட அனைவருக்கும் உத்தரவிட்டார் பேலஸ் நிர்வாகி
பேட்ரிக் வியேரா. இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி திடீர் தாக்குதல்களில் ஆர்சனல் ஈடுபட்டது. ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் ஆர்சனலின் சாக்கா அனுப்பிய பந்து பேலசின் குவேஹியின் மீது பட்டு வலைக்குள் சென்றது. பேலசின் இந்தச் சொந்த கோல் ஆர்சனலின் வெற்றியை உறுதி செய்தது. முதல் ஆட்டத்திலேயே ஆர்சனல் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளைப் பெற்றது. தோல்வி குறித்து வியேரா ஏமாற்றம் தெரிவித்தார்.