பிர்மிங்ஹம்: காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான ஹாக்கி
இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இந்திய அணி
தவரவிட்டது.
நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதிய இந்திய
மகளிர் அணி கடுமையான போராட்டத்துக்குப் பிறகு தோல்வியின் பிடியில் சிக்கியது.
ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ரெபக்கா கிரைனர் கோல் போட்டு ஆஸ்திரேலியாவை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.
பிற்பாதி ஆட்டத்தில் 49வது நிமிடத்தில் இந்தியாவின் வந்தனா கட்டாரியா கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார்.
இரு அணிகளும் தரப்புக்கு ஒரு கோல் போட்டுச் சமநிலை கண்டன. எனவே வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி முறை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
முதல் பெனால்டி முயற்சியில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது. ஆனால் நேரத்தைப் பதிவு செய்யும் கருவியைத் தொடங்கத் தவறியதாகக் கூறி ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் அந்த வாய்ப்பை நடுவர் வழங்கினார்.
இரண்டாவது வாய்ப்பை நன்கு பயன்படுத்தி பந்தை வலைக்குள் ஆஸ்திரேலியா அனுப்பியது.
அதையடுத்து, ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பக்கம் சாய்ந்தது.
ஒரு பெனால்டி வாய்ப்பைக்கூட இந்தியாவால் கோலாக மாற்ற முடியாமல் போக 3-0 எனும் கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா, போட்டியை ஏற்று நடத்தும் இங்கிலாந்தைச் சந்திக்கிறது. அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினாலும் இந்திய ஹாக்கி மகளிரின் காமன்வெல்த் பயணம் இன்னும் முடியவில்லை.
அடுத்ததாக, வெண்கலத்துக்குக் குறிவைத்து நியூசிலாந்துக்கு எதிராகக் களமிறங்குகிறது.