சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி அறிக்கையின் முக்கியமான அடிப்படை கருத்து ஒன்றில் பொய்த் தகவல் இடம்பெற்றிருப்பதன் தொடர்பில் அக்கட்சி அதன் நிலைப்பாட்டை உடனே தெளிவுபடுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாட்டின் மக்கள் தொகை 10 மில்லியனை அடையவேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியிருந்ததாக நேற்று முன்தினம் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான் நேரடியாக ஒளி பரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சி யில் குறிப்பிட்டார். சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் பிரசார செய்தியில் நான்கு விவகாரங்களுக்கு 'ஆமாம்' என்றும் ஒரு விவகாரத்திற்கு 'இல்லை' என்றும் குறிப்பிடப் படுகிறது. 'இல்லை' என்ற அந்த ஒரு விவகாரம், சிங்கப்பூரின் மக்கள் தொகையை 10 மில்லியனாக்கும் மசெகவின் திட்டத்திற்கு சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி மறுப்பு தெரிவிப்பதாகும். இந்நிலையில் சிஜகவின் பிரசாரத்தில் பொய்யான தகவல் இருப்பதைச் சுட்டியுள்ளார் டாக்டர் விவியன். நிகழ்ச்சியின்போது டாக்டர் சீயின் கருத்தைப் பொய் என்று கூறியதுடன் சிங்கப்பூரின் மக்கள் தொகை 10 மில்லியனை எட்ட வாய்ப்பு இல்லை என்றும் டாக்டர் விவியன் சொன்னார்.
"இதை நான் பதிவுசெய்து கொள்ள விரும்புகிறேன். சிங்கப்பூரின் மக்கள் தொகை 10 மில்லியனை எட்ட வாய்ப்பில்லை. 6.9 மில்லியனை எட்டக்கூட முடியாது. மக்கள் தொகைக்கென அரசாங்கத்திற்கு எந்தவொரு இலக்கும் இல்லை," என்றார் அமைச்சர் விவியன். இவ்வாறு சிஜக தொடர்ந்து பொய்த் தகவலுடன் பிரசாரம் செய்தால் அதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்று கேட்கப்பட்டபோது, தாம் அது தொடர்பில் கருத்து கூற முடியாது என்று டாக்டர் விவியன் கூறிவிட்டார். தேர்தல் காலத்தின்போது 'பொஃப்மா' எனப்படும் இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித்திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தை அமைச்சர்கள் அமல்படுத்த இயலாது என்று அவர் விளக்கினார்.
இருப்பினும், இதைத் தொடர்ந்து தன் பிரசாரத்தின் முதல் நாளன்றே வெற்றி கண்டுவிட்டதாக சிஜக நேற்று அறிக்கை வெளியிட்டது.
அது கொடுத்த அழுத்தத்தின் காரணத்தால் மக்கள் தொகை 10 மில்லியனை எட்டுவதற்கான இலக்கு தனக்கு இல்லை என்று மசெக உறுதிசெய்துள்ளதாக சிஜக கூறியது.
இதற்கிடையே ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் விவியன், புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் மசெகவின் லியாங் எங் ஹுவாவுக்கு எதிராக சிஜகவின் பால் தம்பையா நிற்பது குறித்தும் பேசினார். தேர்தல்களுக்கு இடையிடையே எந்த ஆர்வமோ எந்தப் பங்களிப்போ இல்லாத எதிர்க்கட்சி, அந்த வட்டாரத்தின் ஓர் அங்கமாகவே இருந்ததில்லை என்று சிஜகவை அவர் சாடினார்.