“நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பது அவ்வளவு எளிதல்ல என்று பலரும் கூற கேட்டிருக்கிறேன். ஆனால் முதன்முறையாக அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தபோது பலவற்றைக் கற்றுக்கொண்டேன்,” என்கிறார் இளம் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி.
அண்மையில் வெளியீடு கண்ட ‘கட்டா குஸ்தி’ படம் தனக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அண்மைய பேட்டி ஒன்றில் இந்தப் படத்தில் நடித்தபோது கிடைத்த அனுபவங்கள், பாலியல் சீண்டல்கள், சமூகப் பொறுப்பு எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம்திறந்து பேசி உள்ளார்.
பாலியல் தொல்லைகள் இல்லாத துறைகளே இல்லை என்றாகிவிட்டது என்றும் இதன் காரணமாக பாலியல் சீண்டல்கள் குறித்து சிறார்களுக்குப் புரியவைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்றும் கூறுகிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
“கட்டா குஸ்தி’ என்ற தலைப்பை முதலில் கேட்டபோது, அதற்கான அர்த்தம் தெரியாமல் விழித்தேன். பிறகு இயக்குநர் அதுகுறித்து விளக்கம் அளித்தார். அப்போதுதான் எல்லாம் புரிந்தது.
“கணவன், மனைவிக்கு இடையே ஏற்படக்கூடிய பிரச்சினைகளை அலசும் கதையில் மலையாளப் பெண்ணாக நடித்திருக்கிறேன். மேலும் குஸ்தி (மல்யுத்தம்) கலையில் தேர்ச்சி பெற்ற இளம் பெண்ணாக நடித்தது உற்சாகம் அளித்தது. இதற்காக சிறப்புப் பயிற்சியும் பெற்றேன்.
“எனது பங்களிப்பை விமர்சகர்கள் பாராட்டி உள்ளனர். படம் குறித்தும் நேர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளதால் உற்சாகமாக உணர்கிறேன்,” என்று சொல்லும் ஐஸ்வர்யா, தற்போது துல்கர் சல்மானுடன் ‘கிங் ஆஃப் கோதா’, மம்முட்டியுடன் ‘கிறிஸ்டோஃபர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் இரண்டு புதுப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
சிறு வயதில் இருந்தே மம்மூட்டியை மிகவும் பிடிக்குமாம். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தமது நீண்டநாள் கனவு என்றும் அது இப்போது நிறைவேறி இருப்பதில் மகிழ்ச்சி என்றும் கூறுகிறார்.
“அண்மைக்காலமாக தென்னிந்திய திரையுலகில் அடிதடி, திகில் படங்களின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. நகைச்சுவைக்கு கூடுதலாக இடம்கொடுக்கும் படங்கள் வெளியாவது குறைந்துவிட்டது. இதனால் ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்பும் வகையில் ‘கட்டா குஸ்தி’ படம் வெளியாகி உள்ளது.
“முன்பெல்லாம் நகைச்சுவை கதாபாத்திரங்கள் அமைந்தால் சிறப்பாக நடிக்கமுடியும் என்றும் மற்றவர்களைவிட என்னால் நல்ல பெயர் வாங்க முடியும் என்றும் நினைத்துக்கொள்வேன். ஆனால் எனக்கான வாய்ப்பு அமைந்தபோது படபடப்பாக உணர்ந்தேன். ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை சிரிக்க வைப்பது சாதாரணமான பணியல்ல,” என்கிறார் ஐஸ்வர்யா.
கடந்த 2017ஆம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமான இவர், ‘மாயாநதி’ படம் மூலம் மலையாளம் தாண்டி, பிற மொழி சினிமா ரசிகர்களையும் ஈர்த்தார். தொடர்ந்து தமிழில் தனுஷூடன் ‘ஜெகமே தந்திரம்’ மூலம் அறிமுகமானவர், ‘புத்தம்புது காலை’, ‘கார்கி’, ‘கேப்டன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படம் தனக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்துள்ளது என்றும் அதில் தாம் ஏற்று நடித்த பூங்குழலி கதாபாத்திரம் தம்மை கடைக்கோடி ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துள்ளதாகவும் ஐஸ்வர்யா சொல்கிறார்.
பாலியல் தொல்லைகள் குறித்து பெண்கள் வெளிப்படையாகப் பேசி, விவாதிக்க வேண்டும் என்று குறிப்பிடும் இந்த இளம் நாயகி, சமுதாயத்தின் ஒவ்வொரு தளத்திலும் உள்ளவர்கள், இவ்விஷயத்தில் பெண்களை ஆதரிக்க வேண்டும் என்கிறார்.
“தவறான தொடுதல் குறித்து சிறார்கள் மத்தியில் விழிப்புணர்வு தேவை. பல ஆண்டுகளுக்கு முன்பு தவறாக நடந்துகொள்ள முயன்ற ஒருவரை பளார் என்று அறைந்தேன். ஆனால் அண்மையில் யாரையும் அவ்வாறு அடிக்க வேண்டிய நிர்பந்தம் எழவில்லை.
“எல்லா பெண்களுக்கும் இந்த மோசமான தொடுதல் அனுபவம் நிச்சயம் இருக்கும். சிறுமியாக இருந்தபோது குருவாயூர் கோவிலுக்குச் சென்றபோது இந்த அனுபவம் ஏற்பட்டது. பிறகு கோயம்புத்தூரில் அதேபோன்ற சம்பவம் நிகழ்ந்தது. இப்போது விவரம் தெரிந்த பெண்ணாக இருப்பதால் இந்தப் பிரச்சினையை எப்படி அணுக வேண்டும் என்ற புரிதல் உள்ளது,” என்கிறார் ஐஸ்வர்யா.