தேசிய அளவில் கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக சீனா அறிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்றை அறவே ஒழிக்கும் கொள்கையுடன் சீனா செயல்பட்டு வருகிறது. அதனைச் சாதிக்கும் நோக்கில், ஒரு நகரில் ஒரு சிலரைக் கொவிட்-19 தொற்றினாலும் நகரத்தை முழுமையாக முடக்கும் வகையில் சீனா கட்டுப்பாடுகளை அறிவித்து வந்தது.
இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. அதிபர் ஸி ஜின்பிங் தலைமையிலான அரசிற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினர், சீனாவில் அரிய நிகழ்வாகப் பார்க்கப்பட்டது.
புதிய தளர்வுகளின்படி, இலேசான அறிகுறிகளுடன் அல்லது அறிகுறிகளின்றி கிருமி தொற்றியோர் இனி வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, குணமடையலாம். உள்நாட்டிற்குள் பயணம் செய்வோர் இனி பரிசோதனை செய்துகொள்ளத் தேவை இல்லை.
பொது இடங்களுக்குச் செல்லும்முன் மக்கள் இனி தங்களது கைப்பேசிகளில் ‘பசுமை நலக் குறியீட்டைக்’ காண்பிக்கத் தேவையில்லை.
சீன அரசின் இந்த அறிவிப்பை அந்நாட்டு மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
“இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான நேரமிது,” என்று ‘வெய்போ’ சமூக ஊடகப் பயனாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்வு, நாட்டின் பொருளியலையும் நாணய மதிப்பையும் உயர்த்தும் என்றும் கருதப்படுகிறது.
இந்தக் கொள்கை மாற்றத்தின் மூலம் சீனா முன்னோக்கி மிகப் பெரிய அடியை எடுத்து வைத்துள்ளது எனக் குறிப்பிட்ட ஸிவை ஸாங் எனும் பொருளியல் வல்லுநர், “2023ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் சீனா தனது எல்லைகளை முழுமையாகத் திறக்கும் என எதிர்பார்க்கிறேன்,” என்றும் சொன்னார்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை அடுத்து, பயணம் செய்வதற்கு மக்கள் ஆயத்தமாகத் தொடங்கிவிட்டனர்.