ஆக அண்மைய அரசாங்க நில விற்பனைத் திட்டத்தில் தனியார் வீடமைப்புக்கும் வர்த்தக அலுவலகங்களுக்கும் ஒதுக்கப்படும் நில அளவு அதிகரித்துள்ளது.
நகர மையத்திற்கு வெளியில் வர்த்தகத் தேவைகளை ஆதரிக்கும் வகையில் ஜூரோங் லேக் வட்டாரத்தில் 6.8 ஹெக்டர் நிலம் விரைவில் ஒதுக்கப்பட உள்ளது.
2023ஆம் ஆண்டின் முதல் பாதிக்கான உறுதிசெய்யப்பட்ட பட்டியலில் காணப்படும் தனியார் வீடுகளின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இருந்ததைக் காட்டிலும் அதிகரித்து உள்ளது.
இருப்பினும், அண்மையை சொத்துச் சந்தை வேகத் தணிப்பு நடவடிக்கைகளாலும் அடுத்த ஆண்டில் பொருளியல் வளர்ச்சி மெதுவடையும் சாத்தியம் இருப்பதாலும் தனியார் வீடுகளின் வளர்ச்சி விகிதம் மிதமடைந்து உள்ளது.
இதற்கிடையே, அலுவலகங்
களுக்கான நில ஒதுக்கீடு 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவைச் சந்தித்துள்ளது. தேசிய வளர்ச்சி அமைச்சு நேற்று வெளியிட்ட அடுத்த ஆண்டுக்கான பட்டியலில் ஏழு கட்டுமானத் தளங்கள் இடம்பெற்று உள்ளன.
இவற்றில் 4,090 வீடுகளைக் கட்டலாம். இது, இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் 3,505 வீடுகளுக்கு ஒதுக்கப்பட்டதைக் காட்டிலும் 16.7 விழுக்காடு அதிகம்.
4,090 தனியார் வீடுகளில் 700 எக்சகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகளும் அடங்கும். அத்துடன், வர்த்தகக் கட்டடங்களுக்காக 106,400 சதுர மீட்டர் தரைப்
பகுதியும் இந்த ஏழு தளங்களில் இடம்பெற்று உள்ளது.
அடுத்த ஆண்டுக்கான உறுதி செய்யப்பட்ட பட்டியலில் காணப்படும் நில ஒதுக்கீடு, இவ்வாண்டின் முதல் பாதியைக் காட்டிலும் 39.3 விழுக்காடும் இரண்டாம் பாதியைக் காட்டிலும் 25.9 விழுக்காடும் அதிகம் என்று இஆர்ஏ சொத்து நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைப் பிரிவுத் தலைவர் நிக்கலஸ் மாக் தெரிவித்து உள்ளார்.
உறுதி செய்யப்பட்ட பட்டியலில் காணப்படும் ஏழு தளங்களில் இரண்டில் குடியிருப்புக்கும் வர்த்தகங்களுக்கும் இடம் ஒதுக்கப்படும்.
ஜூரோங் லேக் வட்டாரத்திலும் மரினா சவுத்தில் உள்ள மரினா கார்டன்ஸ் கிரசெண்டிலும் அமைந்துள்ள தளங்கள் அவை.
அத்துடன், தெம்பனிஸில் எக்சகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகளுக்கான தளமும் இடம்பெற்றுள்ளது.
தெம்பனிஸ் ஸ்திரீட் 62ல் புதிய டெனன் எக்சகியூட்டிவ் கொண்டோமினியத்தின் அருகே அமைந்துள்ள இந்தத் தளம் வீவக மேம்பாட்டாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று ஆரஞ்சு டீ அண்ட் டை சொத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீவன் டான் தெரிவித்துள்ளார்.
எக்சகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகளை உள்ளடக்கிய கிட்டத்தட்ட 65,000 தனியார் வீடு களுக்கான மொத்த விநியோகத்திற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
இவற்றில் 55,100 வீடுகள் திட்ட மிடலுக்கான அங்கீகாரத்தைப் பெறும். அதேநேரம் அரசாங்க நில விற்பனைத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள 9,900 வீடுகளும் திட்டமிடல் அங்கீகாரத்தைப் பெறாத ஒட்டுமொத்த விற்பனைத் தளங்களும் மொத்த விநியோகத்தில் அடங்கும்.
மேலும், ஏறக்குறைய 33,600 தனியார் வீடுகள் அடுத்த ஈராண்டுகளில் கட்டி முடிக்கப்படும். இந்த விகிதம் 2021ஆம் ஆண்டில் கட்டப்பட்ட 11,500 வீடுகளைக் காட்டிலும் 192% அதிகம்.
ஜூரோங் லேக் வட்டாரம், நகர மையத்திற்கு வெளியே சிங்கப்பூரின் ஆகப்பெரிய வர்த்தக வட்டாரமாக படிப்படியாக மேம்படுத்தப்பட உள்ளது. பரவலாக்கத்திற்கும் வளர்ந்து வரும் வர்த்தகத் தேவைகளுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் இது உருவாக்கப்படுகிறது.
அத்துடன், நீடித்த நிலைத்தன்மைக்கான முன்மாதிரி வட்டாரமாகவும் அது உருவெடுக்கும். 2045ஆம் ஆண்டுவாக்கில் உருவாகும் புதிய கட்டடங்களில் கரிம வெளிப்பாடு இல்லாத நிலையை எட்ட இது உதவும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜூரோங் லேக் வட்டாரத்தில் குடியிருப்பும் வர்த்தகமும் அமையும்