தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்துவரும் நிலையில் வங்கக் கடலில் கடந்த திங்கட்கிழமை காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவானது. பின்னர் இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறிய புயலாக உருவெடுத்தது. ‘மாண்டஸ்’ என்று பெயரிடப்பட்ட புயல் நேற்றுக் காலை வலுப்பெற்று, அசுர வேகக் காற்றுடன் புதுச்சேரியின் காரைக்கால் அருகே மையம் கொண்டதாக வானிலை ஆய்வு நிலையம் அறிவித்தது.
காரைக்காலுக்கு கிழக்கு-தென்கிழக்கில் 560 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 650 கிலோமீட்டர் தூரத்திலும் மாண்டஸ் மையம் கொண்டிருந்தது. இது இன்றோ அல்லது நாளை (டிசம்பர் 10) காலையோ புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு நிலையம் முன்னர் தெரிவித்தது. இருப்பினும், மகாபலிபுரம் அருகே புயல் கரையைக் கடக்கும் என ஆகக் கடைசி அறிக்கை கூறியது.
புயலின் சீற்றம் காரணமாக தமிழகத்தில் ஒன்பது துறைமுகங்களில் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்ற அதிகாரிகள் ஆயத்தமாயினர்.
மாண்டஸ் புயலின் வேகம் அதிகரிப்பதால், நாளை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நேற்று தொடங்கிய கனமழை நாளை வரை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மண்டல துணை இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்
சரிக்கை விடுக்கப்பட்டது. கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பை உணர்த்தும் எச்சரிக்கை அது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரண மாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.