மக்கள் அணிந்துகொள்ளக்கூடிய தொழில்நுட்பக் கருவியை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சிங்கப்பூரர்கள் வாங்க முடியும் என்று ‘டைசன்’ நிறுவனம் அறிவித்துள்ளது.
அனைத்துலக அளவில் வீட்டுப் பொருள்களை இதுவரை தயாரித்துவந்த ‘டைசன்’, அதன் பிரிட்டிஷ், சிங்கப்பூர் ஆய்வுக்கூடங்களில் உருவாக்கிய இந்தக் கருவியின் பெயர் ‘டைசன் ஸோன்’.
வெளியிலிருந்து வரக்கூடிய சத்தத்தை நீக்கும் தன்மையுடைய இந்தக் காதணி கேட்பொறியில் காற்று சுத்திகரிப்பு அம்சமும் பொருந்தியுள்ளது.
அடுத்த மாதம் சீனாவில் இதன் விற்பனை தொடங்கி, அமெரிக்கா, பிரிட்டன், ஹாங்காங், சிங்கப்பூர் என வரிசையாகப் பல நாடுகளில் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், கருவியின் தோற்ற வடிவமைப்பு குறித்து ஒரு சிலர் அதிருப்தி தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
நான்கு சுவர்களுக்குள் காற்று மாசுபாட்டைக் குறைக்கப் பல்வேறு கருவிகளை நிறுவனம் உருவாக்கி இருந்தாலும் வெளிப்புறங்களில் காற்று மாசுபாட்டுப் பிரச்சினையைக் கையாள்வது தொடர்பில் சிந்திக்கத் தொடங்கியதில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இக்கருவியை உருவாக்கும் திட்டம் தொடங்கியதாக நிறுவனத்தின் பொருள் புத்தாக்கப் பிரிவின் துணைத் தலைவர் திரு அலெக்ஸ் நோக்ஸ் கூறினார்.
மூக்கின் அருகே சுத்தமான காற்றுடைய ஒரு குமிழி தேவைப்படுவதை உணர்ந்த நிறுவனத்தின் பொறியாளர்கள், உடலில் அணிந்துகொள்ளக்கூடிய காற்று சுத்திகரிப்பு அம்சத்துக்குக் காதணி கேட்பொறியே பொருத்தம் என்று முடிவெடுத்தனர்.
கருவியின் இரு வடிப்பான்கள் 12 மாதம்வரை நீடிக்கும் என்று நிறுவனம் குறிப்பிட்டது.