சிங்கப்பூர்- திருச்சி வழித்தடத்தில் சேவை வழங்கும் விமான நிறுவனங்களுக்கு திருச்சி அனைத்துலக விமான நிலையம் கடும் எச்சரிக்கையைப் பிறப்பித்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி சென்ற பயணிகளில் இரண்டு பேர் செல்லுபடியாகாத ஆர்டி- பிசிஆர் கொரோனா சான்றிதழை அதிகாரிகளிடம் தாக்கல் செய்ததை அடுத்து அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியது.
“அந்த இருவரில் ஒருவர் பழைய சான்றிதழுடன் வந்தார். மற்றொருவர் பல குறைபாடுகளுடன் கூடிய செல்லுபடியாகாத சான்றிதழை எடுத்துவந்தார்.
“இருவரின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த இருவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் செல்லும் நகர்களைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அந்த இருவரிடம் தொற்று அறிகுறி தெரியவந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தைக் கடுமையான ஒன்றாகக் கருதுகிறோம்.
“பயணிகள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதைக் காட்டும் செல்லுபடியாகக்கூடிய ஆர்டி-பிசிஆர் சான்றிதழுடன் வருகிறார்கள் என்பதை திருச்சி-சிங்கப்பூர் வழித்தடத்தில் சேவையாற்றும் விமான நிறுவனங்கள் (இண்டிகோ, ஸ்கூட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்) உறுதிப்படுத்த வேண்டும்,” என்று திருச்சி விமான நிலைய மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் உருமாறிய பிஎஃப்-7 என்ற ஓமிக்ரான் கிருமித்தொற்று இல்லை என்று அந்த மாநில சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.