மதுரை: மதுரையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ‘தமிழ்நாடு வளர்கிறது’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 7) முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது.
அதில், ரூ. 36,660.35 கோடிக்கான 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையில் விரகனூர் சுற்றுச்சாலை அருகே வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஐடா ஸ்கட்டார் அரங்கில் இந்த மாநாடு நடந்தது.
தைவான் நாட்டைச் சேர்ந்த ‘பெய் ஹாய்’ குழுமம், தோல் அல்லாத காலணிகள் உற்பத்தித் திட்டம், ஹுண்டாய் நிறுவனத்தின் கப்பல் கட்டுமானத் திட்டம் ஆகியவை கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் குறிப்பிடத்தக்கவை.
இந்த மாநாட்டில் பங்கேற்றதோடு மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
மதுரையில் மேலமடை சந்திப்பு பகுதியில் ரூ.150.28 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தையும் அவர் டிசம்பர் 7ஆம் தேதி திறந்து வைத்தார்.
அதன்பிறகு, உத்தங்குடியில் நடைபெற்ற அரசு விழாவில், மேலூரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பூங்காவுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

