சென்னை: கருணாநிதியை தமிழர் இல்லை என்று நடிகை குஷ்பு கூறியதாகவும் இதற்கு ஆடியோ ஆதாரம் இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் கொளுத்திப் போட்டுள்ளார்.
காமராஜ் பிறந்தநாள் விழா மற்றும் தென் சென்னை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அடையாறில் உள்ள கராத்தே தியாகராஜன் இல்லத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய கராத்தே தியாகராஜன், "தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக கூடிய விரைவில் நான் நியமிக்கப்படுவேன். காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும். கட்சிக்கு சுயமரியாதை வேண்டும். தன்மானம் வேண்டும். எனவே, வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் கண்ணியமான கூட்டணி அமைய வேண்டும்.
"மறைந்த கருணாநிதி தமிழர் இல்லை என்று கூறியவர் நடிகை குஷ்பு. அவர் அப்படி கூறியதற்கு என்னிடம் ஆடியோ ஆதாரம் உள்ளது," என காரசாரமாகப் பேசினார்.
உள்ளாட்சித் தேர்தலில் கண்ணியமான கூட்டணி அமைய வேண்டும் என கராத்தே தியாகராஜன் தெரிவித்திருப்பதும் திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.