மதுரை: உயர் நீதிமன்றக் கிளையில் நாளும் ஒரு திருக்குறள், அதற்கான விளக்கத்துடன் ஒப்புவிக்க வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றக் கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருக்குறள் முனுசாமி’ புத்தகத்தைப் படித்தபோது திருக்குறள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.ஹரி பரந்தாமன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடிக்கடி என்னிடம் பேசியது நினைவுக்கு வந்தது.
“தமிழன் என்ற முறையில் ஒவ்வொருவரும் குறைந்தது 51 திருக்குறளையாவது மனப்பாடமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என உணர்கிறேன்.
“இதை இன்று (செப்டம்பர் 30) முதல் நான் தொடங்குகிறேன்.
“இதில் வழக்கறிஞர்கள் என்னுடன் இணைந்துகொள்ளுங்கள். நாளும் வழக்குப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வழக்கறிஞர்களில் ஒருவரைத் தேர்வு செய்து, அவர்கள் சொல்ல வேண்டிய திருக்குறள், அதன் விளக்கமும் தெரிவிக்கப்படும்.
“இதை அந்த வழக்கறிஞர் பிற்பகல் 1.30 அல்லது மாலை 4.45 மணிக்கு ஒரு திருக்குறளையும் அதன் விளக்கத்தையும் ஒப்புவிக்கவேண்டும்,” என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து முதல் நாளான திங்கட்கிழமை ‘சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து’ என்ற திருக்குறள் நீதிமன்றத்தில் படிக்கப்பட்டது.
அதற்கு பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் உரையான ‘சொல்லும் சொல்லை வெல்ல வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக’ என்ற விளக்கத்தையும் வழக்கறிஞர் திருவடிக்குமார் தெரிவித்தார்.