செங்கம்: தமிழ்நாட்டையே உலுக்கிய லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகத் தேடப்பட்டு வந்த சுரேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் இருந்து ரூ.13 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம், 180 கிராம் வைர நகைகளை சிங்கம், முயல் முகமூடிகளுடன் கொள்ளையடித்துச் சென்றனர் கொள்ளையர்கள்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இரு குற்றவாளிகள் ஏற்கெனவே பிடிக்கப்பட்டு விட்டனர்.
மூன்றாவது குற்றவாளியான சீராதோப்பு சுரேஷ் போலிசாரின் கண்ணில் பட்டும் பிடிபடாமல் தப்பி ஓடி தலைமறைவாக இருந்து வந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விக்னேஷ்பிரபு முன்னிலையில் சரண் அடைந்தார்.
சுரேசை திருச்சி தனிப்படை போலிசார் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியும் லலிதா ஜூவல்லரி கொள்ளைக்கு திட்டம் போட்டு கொடுத்தவனுமான திருவாரூர் முருகன் இருப்பிடம் குறித்தும் ரூ.10 கோடி தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் குறித்தும் வேறு நபர்களுக்கு இதில் தொடர்புள்ளதா எனவும் சுரேஷிடம் போலிசார் விசாரிக்க உள்ளனர்.
சுரேஷ் தனது மாமாவான கொள்ளையன் முருகன் தயாரித்த ‘மனசவினவ’, ‘ஆத்மா’ ஆகிய இரு தெலுங்கு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளான்.
ஆனால் இவ்விரு படங்களும் பணப் பிரச்சினையால் வெளிவராமல் நின்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
2008ஆம் ஆண்டு முதல் தனது மாமா முருகனுடன் சேர்ந்து சுரேஷ் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, சென்னை ஆகிய இடங்களில் 20க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளான்.
பாதியில் நின்ற படங்களை மீண்டும் தயாரித்து முடிக்க பணம் தேவைப்படவே திருச்சி லலிதா ஜூவல்லரி கடையை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்திருக்கலாம் என்கின்றனர்.