கொளத்தூர்: உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது பற்றி அதிமுக தலைமை தீவிரமாக பரிசீலித்து வருவதாக பரபரப்பாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேயர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்கவிருப்பதால் கூட்டணி கட்சிகளின் தயவு தேவை இல்லை என்றும் தனித்துப் போட்டியிட்டால் அதிக வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்றும் அதிமுக கருதுவதாகப் பேச்சு அடிபடுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் 80 விழுக்காட்டு இடங்களில் போட்டியிட அதிமுக திட்டமிட்டு உள்ளது.
அனைத்து உள்ளாட்சி அமைப்பு களிலும் 80 விழுக்காட்டு இடங்களில் போட்டியிட்டால்தான் 30 விழுக்காட்டு வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பது அந்தக் கட்சியின் கணக்கு.
கட்சியின் கட்டமைப்பு, இரட்டை இலை சின்னம், வேட்பாளர்களின் சொந்த பலம், அதிகார பலம் ஆகியவை காரணமாக எளிதில் வென்றுவிட முடியும் என்றும் அதிமுக கணித்துள்ளது.
எஞ்சிய 20% இடங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் கூட்டணிக் கட்சிகளைக் கைவிட்டு விடலாம் என்று அதிமுக முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்கும் என்று நம்பப்படும் நிலையில் அந்தத் தேர்தலைத் தடுத்து நிறுத்த நீதிமன்றம் மூலம் ஆளும் அதிமுக சதி செய்வதாகவும் ஆனால் அந்தப் பழியைத் திமுக மீது அது போடுவதாகவும் எதிர்த்`தரப்பு அரசியல்வாதியான ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.
திமுக தலைவரான ஸ்டாலின், தன்னுடைய கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி அந்தத் தொகுதி மக்களுடன், மாணவ மாணவியருடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி பல்வேறு திட்டங்களைத் தீட்டி இருப்பதாகவும் அதற்காக பலரை மறைமுகமாக அதிமுக ஆட்சி நீதிமன்றத்துக்கு அனுப்பி வருகிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதேவேளையில், உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக சதி செய்வதாக பொய்த் தகவல்களை அதிமுக பரப்பி வருகிறது என்றும் அவர் கூறினார்.
சட்டத்தை மீறி விதிகளுக்கு அப்பாற்பட்டு தேர்தலை நடத்தும் சூழல் வந்தால்கூட அதை திமுக சந்திக்கும் என்றார் ஸ்டாலின்.