இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்காந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால், இரு சக்கர வாகனங்களில் ஓட்டுநர்கூட பல நேரங்களில் தலைக்கவசம் அணிவதில்லை.
ஆனால், சென்னையில் ஒருவர் தன் செல்ல வளர்ப்பு நாய்க்கு தலைக்கவசம் அணிவித்து இரு சக்கர வாகனத்தில் கூட்டிச் செல்வதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவலாக வலம் வருகிறது.
சென்னை விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் தெருவில் கைபேசியில் எடுக்கப்பட்ட இந்த காணொளியில் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவரின் தோள் மீது தனது முன்னங்கால்களைப் போட்டு சற்றும் பயமின்றி ஒய்யாரமாக அமர்ந்து செல்கிறது நாய்.
அடிக்கடி இவ்வாறு இரு சக்கர வாகனத்தில் செல்லும் வழக்கம் அந்த நாய்க்கு இருக்கும் என்றே தோன்றுகிறது. சட்டென்று பார்த்தால், பின்னால் இருப்பது நாய் என்றே செல்லத் தோன்றாத அளவுக்கு அது இயல்பாக அமர்ந்துள்ளது.
உயிருக்குப் பயந்து விதிகளைப் பின்பற்றாமல், சட்டத்துக்குப் பயந்து கடமைக்காக சிலர் தலைக்கவசம் அணிவதும் உண்டு.
ஆனால், தங்களது அன்புக்குரியவர்களை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது அவர்களுக்கும் தலைக்கவசம் அணிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தக் காணொளி உள்ளது என்பதையும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity