பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தை மாதம் முதல் தேதியிலிருந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோலாகலமாக நடைபெற்றன.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை.
அவனியாபுரத்திலும் அலங்காநல்லூரிலும் மாடுபிடி வீரர்களை நெருங்க விடாமல் திணறடித்து பலரது உள்ளங்களிலும் குடிகொண்டுள்ளது புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் அனுராதாவின் காளையான ராவணன்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் கடந்த புதன் கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 700 காளைகளை பிடிக்க 730 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் அனுராதாவின் காளை களத்தில் நின்று மிரட்டியது. காளைகளை அடக்க வந்த ‘காளை’களை நெருங்கவிடாமல் மட்டுமல்ல; தெறித்து ஓடவும் விட்டு விரட்டியது.
மற்ற காளைகளை அடக்கிய வீரர்களால் இந்த காளையை அடக்க முடியவில்லை. இறுதியில் சிறந்த காளையாக அது அறிவிக்கப்பட்டது.
இதே போல் நேற்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 700 காளைகளை பிடிக்க 855 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் 3 காளைகள் களமிறக்கப்பட்டன. கருப்பு கொம்பன், வெள்ளைக் கொம்பன், சின்னக் கொம்பன் ஆகிய அந்த 3 காளைகளையும் எந்த ஒரு மாடுபிடி வீரராலும் அணைய முடியவில்லை.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்களை திணறடித்து சிறந்த காளையாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் அனுராதாவின் காளை இதிலும் பங்கேற்று வீரர்களை திணறடித்துள்ளது.
வீரர்கள் எவ்வுளவு முயற்சி செய்தும் அந்த காளையை யாராலும் நெருங்க முடியவில்லை.
‘தொட்டு பாரு’, ‘தொட்டு பாரு’ என வர்ணணையாளர் கூறுவதும் வீரர்கள் அந்த காளை அச்சுறுத்தி தொடவிடாமல் விரட்டுவதும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.
ஒருவர் படுத்துக்கொண்டு காளையை தொட நெருங்கும் போது காளை அவரைத் தொடவிடாதது குறிப்பிடத்தக்கது.