சென்னை: தமிழகத்தில் 2வது நபர் கொரோனா கிருமித் தொற்றுக்கு பலியாகியுள்ளார்.
கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் சிங்காரத் தோப்புப் பகுதியைச் சேர்ந்த 51 வயதான நபருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இவருக்கு ஏற்கெனவே ‘ஆஸ்துமா’ போன்ற உடல்நல கோளாறுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை அவருக்கு மூச்சுத் திணறல் அதிகரித்தது.
இதனால் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை 7.45 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் விராட்டிக்குப்பம் பாதையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கொரோனா கிருமித் தொற்றால் தமிழகத்தில் 2வது நபர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக தெரிவித்தது.
கிருமியால் பாதிக்கப்பட்டு இறந்தவர் விழுப்புரத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவர்.
விழுப்புரம் மாவட்டத்தில் வெளிநாடு, வெளிமாநிலங்களுக்குச் சென்று திரும்பிய 2,070 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களில் 65 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் என்பது தெரியவந்தது.
அதையடுத்து அதில் 55 பேரை அடையாளம் கண்ட சுகாதாரத்துறை அவர்களை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி அவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியது.
அதில் 9 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் விழுப்புரத்தில் கோலியனூர், விக்கிரவாண்டி, திண்டிவனம், முகையூர் உள்ளிட்ட இடங்களில் 21க்கும் மேற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
விழுப்புரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 9 பேரில் இறந்தவரும் ஒருவர்.
தமிழகத்திலேயே சென்னை யில்தான் கொரோனா கிருமியால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 411 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில் சென்னையில் மட்டும் 81 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.