சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் உள்ள கோயம்பேடு மொத்த காய்கறிச் சந்தை தாற்காலிகமாக மூடப்பட்டது.
இதையடுத்து அங்குள்ள கடைகள் இனி திருமழிசை பகுதியில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையில் இயங்கிவந்த கடைகளில் பணியாற்றிய பலருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. சந்தையில் பணியாற்றிய பலர் சொந்த ஊருக்குத் திரும்பி உள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கு ஆங்காங்கே நோய்த்தொற்றைக் கண்டறிய பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இவர்களில் பலருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க கோயம்பேடு சந்தையை மூடவேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் 5ஆம் தேதி முதல் கோயம்பேடு சந்தை தாற்காலிகமாக மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து மொத்த காய்கறிச் சந்தை திருமழிசை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதால் சில்லறை வியாபாரிகள் இனி திருமழிசைக்கு வந்து காய்கறிகளைப் பெற்றுச் செல்லுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் வியாபாரிகள் தரப்பு அதிருப்தி அடைந்துள்ளது.