சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், இம்மாதம் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த தருணத்தைப் பயன்படுத்தி, வீடுவீடாகச் சென்று வீட்டுக்குள் இருக்கும் அனைத்து மக்களுக்கும் 11,957 பெண் பணியாளர்களைக் கொண்டு காய்ச்சல் பரிசோதனைகளைச் செய்து வருவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இ்ப்பணி ஊரடங்கு உத்தரவு முடியும்வரை தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று நேரில் பார்வையிட்டார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தமிழகத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றைத் தடுக்க அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. சென்னையில் இப்போது போடப்பட்டுள்ள ஊரடங்கு கிருமித்தொற்றைத் தடுத்து மக்கள் உயிரைக் காக்கவே போடப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
இதற்கிடையே, செய்தியாளர்களிடம் சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பேசிய போது, “சென்னையில் வீடுவீடாகப் பரிசோதனைக்கு வரும் களப் பணியாளர்களிடம், தங்களுக்கு கிருமித்தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக பொதுமக்கள் நினைத்தால் அதை எந்த ஒரு ஒளிவுமறைவின்றி தெரிவிக்கவேண்டும். அப்படி செய்தால் 10 முதல் 15% இறப்புகளைத் தவிர்க்கமுடியும்.
“சென்னையில் கிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட 299 பேர் போலியான முகவரி, கைபேசி எண்களைக் கொடுத்துவிட்டு காணாமல் போனார்கள். அவர்களில் 150 பேர் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 149 பேரைத் தேடும் பணி தொடர்கிறது.
“சென்னை மாநகராட்சியில் இதுவரையில் 2,10,000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
“இந்த ஊரடங்கில் 90% மக்கள் வீட்டிலேயே இருப்பதால் காய்ச்சல் அறிகுறி கண்டறியும் குழுக்கள் வீடு, வீடாகச் சென்று பரிசோதனை செய்வார்கள்.
“இதன்மூலம் அறிகுறி இருப்பவர்களை எளிதில் கண்டறிய முடியும்,” என்று கூறினார்.
சென்னையில் மீண்டும் நடப்புக்கு வந்துள்ள ஊரடங்கு உத்தரவு மக்களை சிரமப்படுத்துவதற்காகப் போடப்பட்டது அல்ல; கொவிட்-19 கிருமித்தொற்றில் இருந்து மக்களின் உயிரைக் காக்கவே போடப்பட்டுள்ளது.