சென்னை: கொரோனா கிருமித்தொற்று சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவரிடம், தனியார் மருத்துவமனை ஒன்று ஆக அதிகமாக கட்டணம் வசூலித்துள்ளதால், இனி இம் மருத்துவமனை கொரோனா சிகிச்சை அளிக்க முடியாதபடி அதன் அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது தமிழக அரசு.
நோயாளி ஒருவரிடம் 19 நாள் கொரோனா கிருமித்தொற்று சிகிச்சைக்காக ரூ.12.20 லட்சம் கட்டணம் வசூலித்ததை அடுத்து, மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்யப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தனியார் மருத்துவமனைகள் அரசுடன் இணைந்து கொரோனா நோய்க்கான சிகிச்சைகளை மக்களுக்கு வழங்கிட அனுமதி அளித்துள்ளது.
“சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பீவெல் மருத்துவமனையில் சுகாதாரத்துறையினர் நடத்திய ஆய்வின்போது, நோயாளி ஒருவரிடம் 19 நாள் சிகிச்சைக்கு 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்ட விவரம் உறுதி செய்யப்பட்டது. அத்துடன், அரசு வழங்கிய நெறிமுறைகளின்படி கூடுதல் சிறப்பு மருந்துகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, பீவெல் மருத்துவமனைக்கு கொரோனா நோய் சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திக் குறிப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவ மனைகள், அரசு நிர்ணயித்த கட்டண விவரங்களை தெளிவாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.