தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேற்று முன்தினம் ஒரேநாளில் சுமார் 73,883 பேருக்கு கிருமித்தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அத்துறை செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து தொடங்கப்படுகிறது. இந்நிலையில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் தற்போது சுமார் 52 ஆயிரம் பேர் கொவிட்-19 நோய்க்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3.8 லட்சம் பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 439,959 ஆக உள்ளது. இதுவரை சுமார் 48 லட்சம் பேருக்கு கிருமித்தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னையில் நடைபெற்றுவரும் காய்ச்சலைக் கண்டறிவதற்கான சிறப்பு முகாமில் பரிசோதிக்கப்பட்டவர்களில் 17 விழுக்காட்டினருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதியானது.
கடந்த மே 8ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 41,651 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதாகவும் இதில் 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதில் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகளுடன் இருந்த 128,420 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும் இவர்களில் 21,380 பேருக்கு (17%) கிருமி தொற்றியது கண்டறியப்பட்டது என்றும் சுகாதாரத் துறை கூறியுள்ளது.
குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்படுவதால் பெற்றோர் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் குழந்தைகளும் முதியோரும் அதிகம் பாதிக்கப்படுவது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்புதான் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட முதியோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்தது.