பாகூர்: புதுச்சேரியில் உள்ள பாகூர் நகரின் பல்வேறு இடங்களிலும் காணப்படும் சாலைகள் மேடு பள்ளமாகவும் குண்டும் குழியுமாகவும் மிக மோசமாக உள்ளன.
இதனால், வாகனங்களில் செல்வோர் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் வாகனங்கள் பழுதாகி நின்றுவிடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் புகார்கள் குறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை பாதிக்கப்பட்டவர்களும் பொது மக்களும் புகார் அளித்தும் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், தனி ஒருவராக முதியவர் ஒருவர் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைத்து வருகிறார்.
குறிப்பாக பாகூர்- கன்னியக் கோவில் சாலை, பரிக்கல்பட்டு - குருவிநத்தம் சாலை, பாகூர் - மாஞ் சாலை சாலைக் கற்கள் பெயர்ந்து வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவித்து வருகின்றன.
இந்நிலையில், காவலாளியாக பணியாற்றி வரும் குருவிநத்தம் பாரதி நகரைச் சேர்ந்த புருஷோத்த மன், 83, என்ற முதியவர், சாலையில் நடக்கும் விபத்துகளைப் பார்த்து மனம் வருந்தி, விபத்து ஏற்படாமல் தடுக்க முடிவெடுத்தார்.
இதையடுத்து, பாகூர் மாஞ்சாலையில் உள்ள பள்ளங்களை சாலையோரம் உள்ள மண், கற்கள் மூலம் நிரப்பி சரிசெய்து வருகிறார்.
இதுகுறித்து புருஷோத்தமன் கூறியபோது, “பாகூர் - மாஞ்சாலை சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்துகள் நடக்கின்றன. இதை சரிசெய்ய என்னாலான முயற்சியைச் செய்து வருகிறேன். கடந்த மூன்று நாட்களாக தனி ஆளாக சாலையோரம் உள்ள மண், கற்களைக் கொட்டி பள்ளங்களை மூடி வருகிறேன். அரசு செய்யும் என்று எதிர்பார்த்தால் அது இப்போதைக்கு நடக்காது. அதனால் நானே முடிந்ததை செய்துவருகிறேன்,” என்று கூறினார்.