புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.3) இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல ஓடியதுடன், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போலத் தேங்கியது.
இந்த நிலையில், மழை தண்ணீர் வடிய வழியில்லாததால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் மழைநீர் தேங்கியது.
நடராஜர் கோயில் குளமான சிவகங்கை குளம் நிரம்பி வழிவதுடன், நடராஜர் வீற்றிருக்கும் சிற்சபை பகுதி மற்றும் கோயில் வளாகப் பகுதி முழுவதும் இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
நடராஜர் கோயிலில் பெய்யும் மழைநீர் கோயிலின் வடக்கு கோபுரம் அருகே பூமிக்கு அடியில் உள்ள பெரிய அளவிலான வடிகால் வாய்க்கால் வழியாக தில்லையம்மன் கோயில் குளத்துக்குச் செல்லவும், அந்தக் குளம் நிரம்பியவுடன் அதில் இருந்து தண்ணீர் வடிகால் வாய்க்காலான தில்லையம்மன் ஓடைக்குச் செல்லவும் வடிகால் வசதி அரசர்கள் காலத்திலேயே செய்யப்பட்டிருந்தது.
தற்போது அந்த வடிகால் வாய்க்கால் தூர்ந்து போய்விட்டதால் தண்ணீர் வடியாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கோயில் இருக்கும் மழைநீரை வடிய வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.