தனது கூட்டணி கட்சிகளுள் ஒன்றான பாஜகவிற்கு 24 முதல் 26 வரையிலான சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்க ஆளும் அதிமுக முடிவு செய்துள்ளது.
இந்த தொகுதி பங்கீட்டை பாஜகவினர் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், பாஜகவிற்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன என்பது குறித்து இன்னும் முடிவாகாமல் உள்ளதால் குழப்பங்கள் நீடித்து வருகின்றன.
விரைவில் இந்தக் குழப்பங்களுக்கு ஒரு சுமூகத் தீர்வு காணப்பட்டு, உடன்பாடு எட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், கொங்கு மண்டலத்தில் பாஜக கோரும் குறிப்பிட்ட சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க அதிமுக மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளையில், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை பாஜக வுக்கு ஒதுக்க முடிவாகியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தலும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் அடுத்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளன.
இத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட உள்ளதால், தமிழக தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.
இதற்கிடையே, பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 23 தொகுதிகளுக்கு இணையாக தங்களுக்கும் தொகுதிகளை ஒதுக்கித் தர வேண்டும் என தேமுதிக தரப்பில் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், அதிமுக 14 தொகுதிகளுக்கு மேல் தர மறுத்து வருகிறது. அத்துடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் தேமுதிக கேட்கிறது.
இதபோல், திமுக கூட்டணி யிலும் இழுபறி நிலை நீடித்து வருகிறது.
திமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகள் தரப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டு வருகிறது.
ஆனால், திமுகவோ 20 தொகுதி களுக்கு மேல் தர மறுத்துவிட்டது.
அத்துடன், திமுக கூட்டணியில் இைணந்துள்ள மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டிலும் இழுபறி நீடித்து வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 12 தொகுதிகள் வரை கேட்பதாகவும், இவ்விரு கட்சிகளுக்கும் சேர்த்தே 12 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கமுடியும் என திமுக கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
10 தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என்று கேட்கும் மதிமுகவுக்கும் வி.சி.க.வுக்கும் ஐந்து தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆளும், எதிர்க்கட்சிகள் ஒருபுறம் ஆலோசனைகள் செய்து வந்தாலும் மறுபுறம் குழப்பங்களே நீடிப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.