இன்று காலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் நீலாங்கரை இல்லத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரையுடைய கணவர் ஆவார்.
சபரீசன் இல்லத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்ட அதே நேரத்தில் திமுக ஐடி பிரிவின் மாநிலத் துணைச் செயலாளரும், அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகனுமான கார்த்திக் மோகன் சம்பந்தப்பட்ட இடத்திலும், ஜி.ஸ்கொயர் நிறுவன உரிமையாளர் ஜி.ஸ்கொயர் பாலா இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இத்தகைய நடவடிக்கைகள் தேர்தல் பழிவாங்கும் நடவடிக்கைகள் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
“நான் இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு விமானம் மூலம் திருச்சி வந்து இறங்கினேன். அங்கு இருந்து சாலை மார்க்கமாக ஜெயங்கொண்டத்துக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு செய்தி வந்தது. என் மகள் செந்தாமரை வீட்டில் இன்று காலை 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர்.
“இந்த அதிமுக அரசை காப்பாற்றிக் கொண்டிருப்பது மோடியின் பாஜக அரசு. ஏற்கெனவே அதிமுக அரசு மீது முதல்வர் வீட்டில், அமைச்சர்கள் வீட்டில், தலைமைச் செயலாளர் வீட்டில் எல்லாம் சோதனை நடத்தியுள்ளனர். அந்தக் கட்சியை பாஜகவினர் மிரட்டி உருட்டி வைத்துள்ளனர். அதனால் தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளன.
“வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவற்றைப் பயன்படுத்தி அனைவரையும் மிரட்டுகிறார்கள். ஒன்று மட்டும் மோடிக்குச் சொல்கிறேன். இது திமுக. மறந்துவிடாதீர்கள். நான் கருணாநிதியின் மகன்.. மிசாவையே, அவசரநிலையையே பார்த்தவன் இந்த ஸ்டாலின். நீங்கள் எத்தனை சோதனைகள் நடத்தினாலும் அதைப் பற்றி கொஞ்சமும் நாங்கள் கவலைப்படமாட்டோம்.
“தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் உள்ளன. வருமான வரி சோதனை நடத்தினால் திமுகவினர் வீட்டில் முடங்கிப்போய் கிடப்பான் என்று நினைக்கிறார்கள். அது அதிமுகவினரிடம் நடக்கும். அவர்கள்தான் மாநில உரிமைகளை எல்லாம் விட்டு காலில் விழுந்து கிடக்கலாம். ஆனால், நாங்கள் பனங்காட்டு நரிகள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம். எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம். இதற்கெல்லாம் பதில் தரக்கூடிய நாள் தான் ஏப்ரல் 6 என்பதை மறந்துவிடக்கூடாது,” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.