நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது ஏன் என்று அவருடைய தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, எந்தவித சிக்கலுமின்றி நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.
திரையுலகப் பிரபலங்களில் ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்துவிட்டார்கள். இதில் நடிகர் விஜய் தம்முடைய வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து தமது வாக்கைப் பதிவு செய்தார். இது தொடர்பான காணொளிகள், புகைப்படங்கள் இணையத்தில் பலராலும் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
சைக்கிளில் வருவதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வைத்தான் விஜய் மறைமுகமாக சொல்கிறார் எனப் பலரும் இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். இதை முன்வைத்து திமுக இளையரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பாஜகவைச் சேர்ந்த குஷ்பு உள்ளிட்டோரும் பலவாரியான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
சைக்கிளில் சென்று வாக்களித்ததை வைத்து அரசியல் ரீதியான கருத்துகள் பகிரப்பட்டு வருவதைத் தொடர்ந்து விஜய் தரப்பிலிருந்து ஆடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
“விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்ததற்கு ஒரே ஒரு காரணம்தான். வாக்குப்பதிவு மையம் அவருடைய வீட்டிற்குப் பின்புறம் உள்ள தெருவில் இருக்கிறது. அது ஒரு சின்ன தெரு என்பதால் காரில் சென்று வருவது இடைஞ்சலாகவும் இருக்கும். ஆகையால் தான் அவர் சைக்கிளில் வந்தார். இதைத்தவிர வேறு எந்தவொரு காரணமும் கிடையாது.”
இவ்வாறு விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.
“வாக்குப் பதிவு மையத்திற்கு காரில் செல்வது இடைஞ்சலாக இருக்கும் என்றால் விஜய் ஸ்கூட்டரில் வந்திருக்கலாமே. சைக்கிளில் வருவதற்கான உண்மையான காரணம் என்ன? என்று இணையவாசிகள் பதிலுக்குக் கேட்கின்றனர்.