செல்ஃபியால் கோபமடைந்து ரசிகரின் கைபேசியைப் பறித்த அஜித், சிறிது நேரத்தில் அந்த ரசிகரிடமே திருப்பி ஒப்படைத்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
திரையுலக பிரபலங்களில் அஜித் முதல் நபராக வாக்குச்சாவடிக்கு வந்து தமது வாக்கை பதிவு செய்தார். அஜித் வாக்களிக்க வந்தபோது, அவருக்கு அருகில் காவல்துறையினர் வர சற்று தாமதமானது. அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்கக் கூடினார்கள். அஜித் அவர்களைக் கோபமாக முறைக்கவே ரசிகர்கள் சிலர் திரும்பிச் சென்றார்கள். அப்போது இன்னொருபுறம் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க கைபேசியுடன் அஜித் அருகில் வந்தார். அப்போது அவருடைய கைபேசியைப் பறித்துவிட்டார் அஜித்.
அஜித்தின் இந்தச் செயலால் அந்த ரசிகர் அதிர்ச்சியடைந்தார். காவல்துறையினர் ரசிகர்கள் அனைவரையும் வெளியேற்றினார்கள். வாக்களிக்க வரிசையில் நின்றுகொண்டிந்தபோது, தமது பாக்கெட்டில் வைத்திருந்த கைபேசியை ரசிகரை அழைத்து அவரிடம் கொடுத்துவிட்டார் அஜித். வாக்குச்சாவடியில் செல்ஃபி எடுக்க வேண்டாம் என அந்த ரசிகரிடம் அஜித் அறிவுறுத்தினார்.
பின்பு அஜித்துக்கு உடல் வெப்பப் பரிசோதனை எல்லாம் எடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார். தமது வாக்கை பதிவு செய்துவிட்டு அஜித் காருக்கு ஏற நடந்து சென்றபோது அங்கு நின்றுகொண்டிருந்த புகைப்படக் கலைஞர்கள், ரசிகர்கள் அனைவரிடமும் 'ஸாரி... ஸாரி... நன்றி' என்று கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு புறப்பட்டார்.