தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் 125 இடங்களில் வெற்றிபெற்று தனிப் பெரும்பான்மையைப் பெற்று உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இம்மாதம் 7ஆம் தேதி அடுத்த முதல்வராக பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் கூறின.
ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடக்கும் என்றும் கொண்டாட்டம் எதுவும் இப்போதைக்குத் தேவையில்லை என்றும் ஸ்டாலின் தன் ஆதரவாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில், நாளை (மே 4) திமுகவின் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி தங்கள் கட்சியின் சட்டமன்றத் தலைவராக ஸ்டாலினை தேர்ந்தெடுப்பார்கள் என்று தகவல்கள் தெரிவித்தன.
இதனிடையே, ஸ்டாலினின் அமைச்சரவையில் இளையர்கள் அதிகம் இடம்பெற்று இருப்பார்கள் என்று கட்சி வட்டாரங்கள் கூறின.
இருந்தாலும், ஸ்டாலினின் புதல்வரான உதயநிதிக்கு அமைச்சரவையில் இப்போது இடம் இராது என்றும் குறைந்தபட்சம் ஓராண்டிற்குப் பிறகே அவர் அமைச்சராகக்கூடும் என்றும் கட்சித் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய முதல்வர் பதவி ஏற்பதற்கு வசதியாக தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி ஆளுநரிடம் இன்று (மே 3) பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்துவிட்டு விலகிவிட்டார்.
இவ்வேளையில், நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்று இருப்பதாகவும் அதிமுக கூட்டணி 75 இடங்களைக் கைப்பற்றி இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.