சென்னை: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவதை அடுத்து அதிமுக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அந்தப் பதவியில் இருந்து நேற்று விலகிவிட்டார்.
புதிய முதல்வராகப் பதவி ஏற்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பழனிசாமி டுவிட்டரில் செய்தி வெளியிட்டார்.
"தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்கவுள்ள மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அந்தச் செய்தியில் பழனிசாமி கூறினார்.
உடனடியாக பழனிசாமிக்கு டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்த ஸ்டாலின், அவருக்குச் சில வேண்டுகோள்களை விடுத்தார்.
"எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை.
ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்," என்று அந்தச் செய்தியில் புதிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.
பழைய, புதிய முதல்வர்களின் இந்த அணுகுமுறை தமிழக அரசியலில் பெரிதும் வரவேற்கப்படும் ஒன்றாக இருக்கிறது என்று கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
நாகரிகமான அரசியலை நடத்த இரு பெரும் கட்சிகளின் தலைவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதையே இது உணர்த்துவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அரசியலில் எப்போதுமே கண்ணியமான அணுகுமுறையே இந்த இரு தலைவர்களின் விருப்பமாக இருந்து வந்துள்ளதையும் கவனிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.