50க்கு மேற்பட்ட இடங்களில் ஆய்வு; 17 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.வி.வேலுமணிக்குச் சொந்தமான 52 வீடுகளில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கோயம்புத்தூரில் 35 வீடுகளிலும், சென்னையில் 15 வீடுகளிலும் காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் தலா ஒரு வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் எம்எல்ஏ விடுதியில் தங்கியிருந்த வேலுமணியிடம் மணிக்கணக்கில் விசாரணை நடத்தப்பட்டது. அங்கு சோதனை நடைபெற்று வருவதை அறிந்த ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் அப்பகுதியில் குவிந்தனர். எனவே, அதிமுக வட்டாரத்தில் பதற்றமும் அச்சமும் நிலவியது.
லஞ்ச ஒழிப்புக் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்கு பதற்றமான பகுதிகளில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சோதனை நடைபெற்று வரும் நிலையில் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசின் பல்வேறு ஒப்பந்தங்களை தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தன் சகோதரர், உறவினர்கள் ஆகியோருக்குக் கொடுத்து முறைகேடு செய்து சொத்து சேர்த்ததாக வந்த புகாரை அடுத்து அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவுசெய்யப்பட்டது. ரூ. 1.20 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்திருந்தார்.
சென்னை, வேளச்சேரியில் உள்ள வேலுமணியின் உறவினர் சந்திரசேகர் வீடு, கோடம்பாக்கம் ரெங்கராஜபுரத்தில் 'கேசிபி இன்ஃப்ரா லிமிடட்' நிறுவனம் உள்ளிட்டவற்றிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சென்னை மாநகராட்சித் தலைமைப் பொறியாளர் நந்தகுமார் வீட்டிலும், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நமது அம்மா நாளிதழ் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
'நமது அம்மா' நாளிதழின் வெளியீட்டாளரும் வேலுமணியின் நெருங்கிய நண்பருமான சந்திரசேகரின் வீடு, மாதவரத்தில் உள்ள பால் பண்ணை பேங்க் காலனியில் உள்ள கட்டுமான நிறுவனத்திலும் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.