வாலாஜாபாத்: 'சர்க்கார்' படத்தில் வருவது போல உள்ளாட்சித் தேர்தலில் தனது வாக்கை யாரோ போட்டுவிட்டுச் சென்றதை அடுத்து, இப்பிரச்சினையை அப்படியே விட்டுவிட்டுச் செல்லாமல் கைக்குழந்தையுடன் போராடி தனது வாக்கை முறைப்படி போட்டுவிட்டுச் சென்ற பார்வதியை (படம்) கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜா பாத், சிங்காடிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் பார்வதி, 30. இவர் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த குமாரவேல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு, ஆறு மாத கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார். பார்வதி தனது வாக்காளர் அடையாள அட்டையை பிறந்த ஊரான சிங்காடி வாக்கத்தில் இருந்து உத்திரமேரூர் பகுதிக்கு மாற்றாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சிங்காடிவாக்கத்தில் உள்ள தனது வாக்கை செலுத்துவதற்காக கைக்குழந்தையுடன் வாக்குச்சாவடிக்கு அவர் வந்தபோது, பார்வதிக்கு முன்பே அவரது வாக்கை வேறு யாரோ ஒருவர் கள்ள வாக்காக பதிவு செய்துவிட்டுச் சென்றுவிட்டார் என்பது தெரியவந்தது.
இதை அறிந்த பார்வதி அதிர்ச்சி அடைந்து வாக்குப்பதிவு மைய அலுவலரிடமும் வேட்பாளர்களின் முகவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து பார்வதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, வாக்குப்பதிவு மையத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வதியிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, சர்க்கார் படத்தில் விஜய் வாக்கை செலுத்தியதைப் போல 49 பி படிவத்தை பார்வதிக்கு வழங்கி 'சேலஞ்ச்' வாக்கை பதிவு செய்யவைத்தனர்.