சென்னை: தமிழகத்தில் ஐந்தாம் கட்ட மாபெரும் கொவிட்-19 தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.
முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் துணி துவைக்கும் இயந்திரம், 'மிக்ஸி', 'பிரஷர் குக்கர்', 'ஆண்ட்ராய்டு' கைபேசிகள் உள்ளிட்ட பரிசுகளை வழங்க உள்ளதாக அறிவித்திருந்தனர்.
இதனால், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள ஏராளமான மக்கள் தடுப்பூசி முகாம்களில் குவிந்தனர்.
கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்கவும் அன்றாட கிருமிப் பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்கவும் கடந்த ஐந்து வாரங்களாக ஞாயிறுதோறும் மாபெரும் தடுப்பூசி முகாம்களை நடத்தும் பணியை அரசு முடுக்கிவிட்டிருந்தது.
மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போதிய அளவில் தடுப்பூசி இருப்பு உள்ளதால், மக்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொண்டு தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகளும் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், ஏறக்குறைய 30,000 முகாம்களில் 33 லட்சம் பேருக்கு நேற்றிரவு 7 மணிவரை தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள், பரிசுகளையும் வழங்க உள்ளதாக மாவட்ட, கிராம நிர்வாகங்கள் அறிவித்து இருந்தன.
மதுரையில் நேற்றைய தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் துணி துவைக்கும் இயந்திரம், கைபேசிகள், குக்கர், சேலைகள், வேட்டி, துண்டுகள் வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையர் கா.ப. கார்த்திகேயன்அறிவித்திருந்தார்.
"நிறையப் பேருக்கு இன்னும் பயம் உள்ளதால் தடுப்பூசி போடத் தயங்குகின்றனர். தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மூவருக்கு 32 அங்குல வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் பரிசாக வழங்கப்படும்,'' என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கூறினார்.
"ஈரோடு, பவானி தாலுகாவில் தடுப்பூசி போடுபவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து முதல் பரிசாக ஐவருக்கு ரூ.1,000 மதிப்புள்ள பட்டாசுப் பெட்டிகளும் இரண்டாம் பரிசாக 100 பேருக்கு பெரிய அளவிலான குடைகளையும் வழங்க உள்ளோம்," என பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் கூறியுள்ளார்.