சென்னை: எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளியல் மதிப்பை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயர்த்தவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இந்த இலக்கை அடைவது வெறும் கனவு மட்டுமல்ல, அதை அடையக்கூடிய திறன் தமிழக அரசுக்கு உள்ளது என தமிழக அரசின் தொழில்துறை செயலாளர் முருகானந்தன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அண்மையில் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பல்வேறு நிபுணர்கள் அடங்கிய குழுவானது இலக்கை அடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் பொருளியலுக்கு சேவைத்துறையின் பங்களிப்பு 55 விழுக்காடாகவும் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 30 விழுக்காடாகவும் உள்ளதாகக் குறிப்பிட்ட முருகானந்தன், விவசாயத்துறை 15 விழுக்காடு பங்களிப்பதாகத் தெரிவித்தார்.
"தமிழக அரசு உற்பத்தி, விவசாயத்துறையுடன் அணுக்கமாகச் செயல்பட வேண்டும். நாட்டிலேயே மிகச் சிறந்த ஒன்றாகப் பெயரெடுத்துள்ள சென்னை துறைமுகத்தின் மூலம் ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்தினால் நிர்ணயித்த இலக்கை எட்டுவது உறுதி செய்யப்படும்.
"ஒவ்வோர் ஆண்டும் சுமார் இருபது விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்தால் ஒரு டிரில்லியன் டாலர் பொருளியல் இலக்கை நிச்சயம் அடையலாம்," என்று முருகானந்தன் கூறினார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்தவரையில் நாட்டில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவது சாத்தியம் என்ற நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் பேசிய பல நிபுணர்களும் தமிழக அரசு தனது பொருளாதார இலக்கை அடைவதற்கான ஆலோசனைகளை முன்வைத்தனர்.