சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள தனது ஆருயிர் தோழி ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று மலர்களை வைத்து கரம்கூப்பி மரியாதை செய்து, கண்ணீர்மல்க சசிகலா அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து எம்ஜிஆர், அண்ணா சமாதிகளுக்கும் சென்று அவர் மாலை அணிவித்தார்.
அங்கிருந்த ஆதரவாளர்களிடம் பேசிய சசிகலா, "அதிமுகவை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள். கட்சிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது," என்று சொன்னார்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, "கடந்த ஐந்து ஆண்டுகளாக என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை இப்போதுதான் ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துள்ளேன்.
"கழகத்தை அம்மா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு இங்கிருந்து செல்கிறேன். என் வயதில் முக்கால் பகுதி காலத்தை அம்மாவுடன் நான் வாழ்ந்துள்ளேன்.
"தலைவரும் அம்மாவும் தொண்டர்களுக்காகவே, தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள். அவர்கள் அதிமுகவைக் காப்பாற்றுவார் கள்," என்று கூறினார்.
ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் ஏழு மாதங்களுக்குப் பிறகு ஜெய லலிதா நினைவிடத்துக்கு வந்திருந்த வி.கே.சசிகலாவை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் மெரினாவில் குவிந்திருந்தனர்.
மக்கள் கூட்டத்தைக் கட்டுப் படுத்த காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே, இன்று அதிமுக வின் பொன்விழா ஆண்டை மிகச் சிறப்பாகக் கொண்டாட உள்ளதாக அதிமுகவின் இரட்டைத் தலைமை அறிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக, 49 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்நாளை பொன்விழாவாகக் கொண்டாடும் வகையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட உள்ளதால், மெரினா கடற்கரையில் 3,000 போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை இப்போது தான் இறக்கி வைத்துள்ளேன்.
வி.கே. சசிகலா