சென்னை: யார் இந்தியர்கள் என்று தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை என திமுக எம்பி கனிமொழி கூறிஉள்ளார்.
சொமேட்டோ போன்ற தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
அண்மையில் சொமேட்டோ ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரிடம் பேசும்போது, இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்றும் அனைவருக்கும் சிறிதளவேனும் இந்தியில் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியும் தமது எதிர்ப்பை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
"குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை," என கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும்தான் வேலை என்று சட்டம் இயற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
"அலுவல் மொழியாக இந்தி இருந்தாலும் கூட, பிற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. ஆனாலும் பல்வேறு வழிகளில் தமிழர்கள் மீது இந்தியை திணிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தனியார் உணவு வினியோக நிறுவனம் தான் இத்தகைய முயற்சியில் முதலில் ஈடுபட்டது என்று கூற முடியாது.
"வங்கிகள், அஞ்சல், விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 'இந்தியனாக இருந்து கொண்டு இந்தி பேசத் தெரியாதா' என்ற அவமதிக்கும் வகையிலான கேலி வினாக்கள் தமிழர்களை நோக்கி எழுப்பப்படுகின்றன," என ராமதாஸ் கூறியுள்ளார்.