சென்னை: சசிகலா பேசுவதை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இல்லாத ஒருவர் பேசுவதை ஊடகங்கள் பரபரப்புக்காக பெரிதுபடுத்துகின்றன என்று நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
"அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் தம்மை அதிமுக பொதுச்செயலாளர் என்று கூறி வருவது தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
"நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்து அமைப்புகளுமே நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று ஏற்கெனவே தெளிவுபடத் தெரிவித்துவிட்டன," என்றார் பழனிசாமி.
அண்மையில் சென்னையில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்துக்குச் சென்ற சசிகலா, அங்கு அதிமுக கொடியை ஏற்றினார். அங்குள்ள கல்வெட்டில் 'அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா' என்று பொறிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிமுக தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், சசிகலா மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.